ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 16 அக்டோபர், 2009

இனி என்றுமே ஞான தீபாவளி !





"ஞான தீபாவளி"



ராதேக்ருஷ்ணா! அழியாத அமரத்துவத்தின் குழந்தைகளுக்கு ! பக்தியும், ஞானமும் வளர்வதற்கான  தீபாவளி ஆசீர்வாதங்கள்!   சனாதன இந்து தர்மத்தின் மிகப்பெரிய பலமே பக்திதான்!  பக்தியே மனித வாழ்வின் தலையாய கடமை!  அந்தக் கடமையை சரியாக செய்பவரே, மற்ற எல்லாக் கடமைகளையும் ஒழுங்காக செய்யமுடியும்! 

பக்தி என்பது பகவானிடத்தில் வைக்கக்கூடிய உன்னதமான அன்பேயாகும்.  யார் வேண்டுமானாலும் பகவானிடத்தில் பக்தி செய்யமுடியும் ! 
பக்தி செய்வதற்கு மனம்தான் வேண்டும் !  மனித மனமே வாழ்வை நிர்ணயம் செய்கிறது.  மனம் சரியான பாதையில் சென்றால் சத்தியமாக வாழ்க்கை மிக நன்றாகவேயிருக்கும்.  உலகில் விலை நிர்ணயம் பண்ணமுடியாத ஒரு பொருள் "மனித மனமே".   மனதை சரியான பாதையில் அழைத்துச்செல்லும் ரகசியம் இந்து தர்மத்திற்கு மட்டுமே தெரியும் ! 

அதனால்தான் பலவிதமான பண்டிகைகள், பலவிதமான காரணங்களோடு, பல சந்தர்ப்பங்களில் அழகாகக் கொண்டாடப்படுகிறது !  அதில் அற்புதமான ஞான ஒளியை அடைவதற்கானப் பண்டிகையே "தீபாவளி" ! தீபங்களின் வரிசையில் அஞ்ஞான இருட்டு அழிந்து, ஞான ஒளி பிரகாசிக்கவே "தீபாவளி"!


உபநிஷத்து "தமஸோ மா ஜ்யோதிர் கமய" என்று ப்ரார்த்திக்கின்றது.  அதாவது "இருட்டிலிருந்து என்னை 
வெளிச்சத்திற்கு அழைத்துச்செல்" என்று பகவானிடம் மனமுருகி 
ஒரு பிரார்த்தனை!  பகவானையும், சத்குருவையும் தவிர வேறு யாரால் இந்த உலகத்து ஜனங்களை ஞான வெளிச்சத்திற்கு அழைத்துச்செல்லமுடியும் !  "ஞானத்திற்கு சமமான பவித்திரமான ஒரு பொருள் வேறெதுவும் இல்லையென்று"  பகவான் ஸ்ரீ க்ருஷ்ணன், 
ஸ்ரீ மத் பகவத் கீதையில் அர்ஜுனனுக்கு சொல்கின்றான்.  ஞானம் எல்லோரிடத்திலும் உள்ளது.  ஆனால் அது மறைந்துள்ளது!  சரியாகச் சொல்லவேண்டுமென்றால் அதை மூன்று திருடர்கள் கொள்ளையடிக்கிறார்கள்.  

அவர்கள் யார் யாரென்று அற்புதமாக ஒரு மஹாத்மா இந்த ஸ்லோகத்தில் ஜோராகச் சொல்லுகின்றார்!

"காம க்ரோதஸ்ச லோபஸ்ச தேஹே திஷ்டந்தி தஸ்கரா:

ஞான ரத்ன(அ)பஹாராய  தஸ்மாத் ஜாக்ரத !   ஜாக்ரத ! "

"காமம், கோபம், சுயநலம்  என்கின்ற மூன்று திருடர்கள் நம்முடைய ஞானம் என்னும் ரத்தினத்தை அபஹரிக்கின்றார்கள்.  ஆதலால் எப்பொழுதும் இந்த மூன்று திருடர்களிடமும் சர்வ ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் ! சர்வ ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் ! "



அதனால் ஞானத்தை யாரும் தேடவேண்டிய அவசியமில்லை!  தன்னிடத்திலிருக்கும்
ஆசை, கோபம், சுயநலம் ஆகியவற்றை கொன்றொழித்தாலே 
போதும்.  சிலபேர் உளறுவதுபோல் 
பயப்படுதல் ஞானத்தின் ஆரம்பமாகாது.  பயமில்லாமலிருப்பதே  ஞானமாகும்.  உள்ளதை உள்ளபடி உணர்ந்து 
பயப்படாமல், குழம்பாமல், வருத்தப்படாமல், ஆனந்தமாக இருப்பதே ஞானமாகும்.

 ஆசை, கோபம், சுயநலம் ஆகியவை அசுர குணங்கள் !  இந்த அசுரர்களை வதம் செய்தாலே நிம்மதி பிறக்கும்.  இந்த அசுரர்களுக்கு ஆகாத குணங்களே 
பக்தி, அமைதி, தியாகம் போன்ற தேவ குணங்கள் !  இந்த தேவகுணங்கள் அசுரகுணங்களை அடக்கியாளுமோ 
அல்லது அடங்கிப்போகுமா என்றால் சத்தியமாக அடங்கித்தான்போகும்.  அசுர குணங்களெல்லாம் "நரகாசுரன்" !  நல்ல குணங்களெல்லாம் "தேவேந்திரன்" !  அப்பொழுது இவற்றை அழிக்கவே 
முடியாதோ என்று நம்பிக்கையிழக்க
வேண்டாம்!  இவற்றை அழிக்க 
தேவகுணங்கள் ஒரேயொரு காரியத்தை
மட்டும் சரியாகச் செய்தால் போதும். 
அது என்ன காரியம்? 

மிகவும் கடினமான காரியமோ ?  மிகவும் முயற்சி செய்து பல காலங்கள் காத்திருக்க வேண்டுமோ ? இல்லவேயில்லை !
 

உலகில் மிக மிக சுலபமான ஒரேயொரு
காரியம்;  எல்லோராலும் செய்யமுடிந்த ஒரு காரியம்; எல்லோருக்கும் 
அருகதையுடைய ஒரு காரியம்; ஜாதியோ, பணமோ, வயதோ, படிப்போ, அந்தஸ்தோ, ஆண் பெண் பேதமோ, பதவியோ, மொழியோ போன்ற எந்த ஒரு விஷயத்தாலும் பாதிக்கப்படாத சமத்துவத்திற்கு சான்றான ஒரு காரியம் "சரணாகதி" மட்டுமே! 

பகவானிடத்தில் சரணாகதி செய்துவிட்டால் நிச்சயமாக ஜெயிக்கமுடியும்.  சரணாகதி 
என்றால் "உன் சரணங்களே கதி" என்று அர்த்தம்.  அதாவது " நீயே எனக்கு புகலிடம்" என்று அர்த்தம். 

எல்லோருமே ஆழ்ந்து தூங்குகின்ற 
சமயத்தில், தன்னை மறந்து கிடக்கின்ற சமயத்தில், ஒரு கெட்ட  காரியமும் செய்வதில்லை!  ஏனென்றால் அந்த சமயத்தில் தன்னைப் பற்றிய நினைவையே 
மறந்துவிடுகின்றனர்.  அந்த சமயத்தில் எல்லோருமே பகவானிடத்தில் லயமடைகின்றனர்.  அதனால்தான் எல்லோருமே தூக்கத்தை மிகவும் ரசிக்கின்றார்கள்; நேசிக்கின்றார்கள்;அனுபவிக்கின்றார்கள்.  தூங்கிக்கொண்டிருக்கும்போது விறுப்போ, வெறுப்போ, பயமோ, சந்தேகமோ, குழப்பமோ, எதிர்பார்ப்போ, ஏமாற்றமோ, இறந்தகாலமோ, எதிர்காலமோ, பழி வாங்கும் எண்ணமோ, துக்கமோ போன்ற எந்த நிலைமையும் கிடையாது.  

அதேபோல்
விழித்துக்கொண்டிருக்கும்போதும் 
அமைதியாய் வாழ்வதற்காகவே "சரணாகதி".  பகவானிடத்தில் தன்னை பூரணமாக அர்ப்பிப்பதே சரணாகதி. 

அசுர குணங்களாகிய நரகாசுரனை
அழிக்க, சாத்வீக குணங்களாகிய தேவேந்திரன் பகவான் ஸ்ரீ க்ருஷ்ணனிடத்தில் சரணாகதி செய்யவேண்டும்.  அதன் பிறகு தானாகவே மனித மனதிற்கு
சமாதானமும், சாந்தியும், நிச்சயமாகக் கிடைத்துவிடும்.

  பகவான் ஸ்ரீ க்ருஷ்ணனும் 
ஸ்ரீமத் பகவத் கீதையில்,

"சர்வ தர்மான் பரித்யஜ்ய 
மாமேகம் சரணம் வ்ரஜ |

அஹம் த்வா சர்வ பாபேப்யோ 
மோக்ஷயிஷ்யாமி 
மா ஷுச: ||

என்று 18வது அத்தியாயத்தில் வாக்குறுதி கொடுக்கின்றான்.  அதாவது "எல்லா தர்மங்களையும் விட்டு விட்டு, என்னை மட்டுமே சரணடை !   நான் உன்னை அனைத்துப் பாபங்களிலிருந்தும் விடுவிக்கிறேன் !  வருந்தாதே ! " என்று அனுக்ரஹம் செய்கின்றான்.  

பாபங்கள்தான் துன்பத்தின் அஸ்திவாரம்! பாபத்திற்கு அஸ்திவாரம் அசுரகுணங்களே ! அதனால் அசுர குணங்களை வேறோடு 
அழிப்பதே ஆனந்தத்தின் ரஹஸ்யம்!  அதற்கு சரணாகதியே உபாயம்!  சரணாகத வத்ஸலன் பகவான் ஸ்ரீ க்ருஷ்ணனே! 

அதனால் ஹே பக்த ஜனங்களே !  இனி ஒரு குழப்பமில்லை !  இனி அசுர குணங்களாகிய நரகாசுரனைப் பற்றி நீங்கள் கவலைப்படவேண்டாம் !  இந்த தீபாவளிக்கு பகவான் ஸ்ரீ க்ருஷ்ணனின் திருவடிகளில் சரணாகதி செய்து, உங்களை ஒப்படைத்துவிடுங்கள் ! 

அப்பொழுது உங்களுக்குள் அற்புதமான
ஞான ஒளியை நீங்கள் அனுபவிப்பீர்கள்.  ஞான ஒளியிருக்குமிடத்தில் அஞ்ஞான இருட்டிற்கு இடமில்லை.  ஞானமுள்ளவர்களுக்கு தினம் தினம் தீபாவளிதான் !


இனி ஒரு கவலையில்லை ! 
சரணாகதி உண்டு !

பகவான் ஸ்ரீ க்ருஷ்ணன் உண்டு !
"ராதேக்ருஷ்ணா" நாம ஜபம் உண்டு !

சத்குருநாதன் துணை என்றும் உண்டு ! இனி என்றுமே ஞான தீபாவளி !

அதனால் இனி நிச்சயம் நிம்மதியும், சமாதானமும், சாந்தியும், வளமும், நீங்காத செல்வமும், ஆரோக்கியமும், அன்பும், வாழ்க்கையும் நிரந்தரமாக உண்டு ! உண்டு ! உண்டு !  ராதேக்ருஷ்ணா! ராதேக்ருஷ்ணா! ராதேக்ருஷ்ணா !  மங்களம்!

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP