ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 5 நவம்பர், 2009

ஆசைப்படு ! ! !



ராதேக்ருஷ்ணா


ஆசைப்படு !


ராதிகாவின் பாதத்தில் சலங்கையாக இருந்து
மாலாய் பிறந்த நம்பியான
க்ருஷ்ணன் உன்னைப் பிடிக்க ஆசைப்படு !

சேவா குஞ்சத்தில் மெத்தையாய்
கிடந்து திவ்ய ராதேக்ருஷ்ண
ப்ரேம சங்கமத்தில் கசங்க ஆசைப்படு !

ராதிகா, விரஹத்தில் உடுத்தும்
க்ருஷ்ணனின் பீதாம்பரமாக இருந்து
அவனை உள்ளபடி உரச ஆசைப்படு !

விரஹத்தில் தவிக்கும் ராதைக்கு,
க்ருஷ்ணன் வரவைச் சொல்லும்,
கருங்குயிலாக பாட ஆசைப்படு !

க்ருஷ்ணனை நினைத்து அவன் கிடைக்காத
சமயத்தில் ராதை கட்டி அணைத்துக் கொண்டு கொஞ்சும்
கன்றுக்குட்டியாகத் திரிய ஆசைப்படு !  

க்ருஷ்ணனுக்காக மயில் பீலியை
கேட்கும் ராதிகாவின் அருகிலிருந்து
தோகையையே தரும் மயிலாக ஆட ஆசைப்படு !

ராதிகா பழம் தந்து வளர்க்க,
க்ருஷ்ணன் தோளில் உட்கார்ந்து,
ராதா நாமத்தை மட்டும் பேசும் 
பச்சைக்கிளியாக இருக்க ஆசைப்படு !

  
மழையில் நனைந்த ராதையும் க்ருஷ்ணனும்
ஒதுங்க கோவர்தனமலையின்
குகையாக  மாற ஆசைப்படு !

க்ருஷ்ணனின் கரங்களில் இருந்துகொண்டு
  ராதிகாவின்மேல் தண்ணீரையடிக்கும்
பீச்சாங்குழலாக வாழ ஆசைப்படு !
  
 க்ருஷ்ணனாலும் உடுத்த முடியாத
விரஹ அக்னியில் தஹிக்கும்
ராதையின் வஸ்திரமாக ஆசைப்படு !

ராதிகாவும் க்ருஷ்ணனும் அட்டகாசமாக
நீந்தி விளையாடி, ஜலக்ரீடை செய்யும்
யமுனையாக ஓட ஆசைப்படு !

ராதே தர, க்ருஷ்ணன் சுவைக்க,
பின் இருவரும் மாறி மாறி ருசிக்கும்
சுகந்த தாம்பூலமாக வாயிலிருக்க ஆசைப்படு !

க்ருஷ்ணன் கமலக்கரத்தால் பறித்து,
ராதிகாவின் கருங்கூந்தலில் ப்ரேமையோடு
சூட்டும் புஷ்பமாக மலர ஆசைப்படு !

சுகந்தமான தைலத்தைத் தடவி,
க்ருஷ்ணன் தன் கையினால் பிடித்து,
ராதிகாவின் கார்கூந்தலில் 
சீப்பாக வார ஆசைப்படு ! 

அஷ்டசகிகள் பறித்து அரைத்துத்
தர, செந்தாமரைக் கையன் க்ருஷ்ணன்,
பந்தார் விரலியின் திருக்கைகளில்
வைத்துவிடும் மருதாணியாக உலர ஆசைப்படு ! 

சரத்கால இரவுகளில் ராதிகாவை
வசீகரிக்க க்ருஷ்ணன் வாசிக்கும்
வேணுவாக சப்திக்க ஆசைப்படு !
 
நடுஇரவில் தூய பெருநீர் யமுனையில்,
அஷ்ட சகிகளோடு, ராதா க்ருஷ்ணனை
சுமக்கும் படகாக மிதக்க ஆசைப்படு !

  வெட்கத்தால் சிவந்த ராதையும்,
காதலால் கறுத்த க்ருஷ்ணனும்,
நிழலுக்கு ஒதுங்கும் மரமாக நிற்க ஆசைப்படு !

 கொங்கையில் க்ருஷ்ணனை கட்டிக்கொண்டு
ராதிகா ப்ரேமையில் மயங்கி சயனிக்கும்
கோட்டுக்கால் கட்டிலாக தாங்க ஆசைப்படு !

க்ருஷ்ணன் அறைக்க, அஷ்ட சகிகள் பூச
ராதிகா திருமேனியின் தாப ஜ்வரத்தை
தணிக்கும் சந்தனமாக தடவ ஆசைப்படு !

க்ருஷ்ணன் ராதையை அலங்கரிக்க,
ராதை க்ருஷ்ணனை அலங்கரிக்க,
அதை அநுபவிக்கும் நிதிவனமாக ஆசைப்படு ! 

க்ருஷ்ணனுக்குள் உற்பத்தியாகி,
ராதிகாவின் கர்ப்பத்தில் ஆனந்தமாய்
சிறையிலிருக்கும் சிசுவாக வளர ஆசைப்படு ! 


 எதெற்கெல்லாமோ ஆசைப்பட்டாயே !

என்ன சுகத்தைக் கண்டாய் ?

புலம்பல் ஒன்று மட்டும்தான் மிச்சம் ... 



இனி இவ்வாறாக ஆசைப்படு ! 

பிறகு நீயே சொல்வாய் ! ! !




காத்திருக்கிறேன் !
உன் அனுபவத்திற்காகவும்,
ஆனந்தமான பதிலுக்காகவும் !



நிச்சயம் அந்த நாளும் வரும் ! ! !



0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP