ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 7 நவம்பர், 2009

காத்திரு ! ! !



ராதேக்ருஷ்ணா

காத்திரு !

பகவானுக்காக காத்திரு !



நாரதர் பகவானின் தரிசனத்திற்காக
ஒரு யுகமாக நாம ஜபத்தோடு
நிதானமாகக் காத்திருந்தார் ! 

ஸ்ரீ ராமனைப் பிள்ளையாய்
அடைவதற்கு தசரதனும், கௌசல்யாவும்
பல வருஷங்கள் காத்திருந்தார்கள் !

ஸ்ரீ ராமனுக்கும், சீதாவுக்கும் கல்யாணம்
செய்துவைக்க விஸ்வாமித்திரர்
யுகங்களாக காத்திருந்தார் !

காட்டிற்கு சென்ற ஸ்ரீ ராமன், திரும்பி வர
அயோத்யா ஜனங்களும், பரதனும்
14 வருஷங்கள் காத்திருந்தனர் !

அசோகவனத்தில், சீதா பிராட்டி
ஸ்ரீ ராமனின் செய்திக்காக
10  மாதங்களாக காத்திருந்தாள் !

 ராமனின் குழந்தைகளுக்கு,
பெயர் வைக்க வால்மீகி மஹரிஷி
பல வருஷங்கள் காத்திருந்தார் !

வசுதேவரும், தேவகியும், க்ருஷ்ணனைப் பெற
 6 குழந்தைகளை இழந்தும், பலராமனையும்
தொலைத்து காத்திருந்தார்கள் !

யசோதையும், நந்தகோபனும், க்ருஷ்ணனை
அனுபவிக்க மலடனாகவும், மலடியாகவும்
 பல வருஷங்கள் காத்திருந்தார்கள் !

கோபிகைகள் ராச க்ரீடைக்காக,
க்ருஷ்ண த்யானத்தோடு, விரஹத்தில்
சில மாதங்கள் காத்திருந்தனர் ! 
 

 க்ருஷ்ணனை ப்ருந்தாவனத்தில் சென்று
பார்க்க, அக்ரூரர் ரகசியமாகப் ப்ரார்த்தனை
செய்து 11 வருஷங்கள் காத்திருந்தார் !

 பால்யத்திலிருந்து க்ருஷ்ண கதை கேட்டு,
க்ருஷ்ணனின் கைப்பிடிக்க ருக்மிணி
பல வருஷங்கள் காத்திருந்தாள் ! 
 
 மதுரா சென்ற க்ருஷ்ணனைப் பார்க்க
ப்ருந்தாவனத்து ஜனங்கள் 
பல வருஷங்கள் காத்திருந்தனர் !

வேத பாட சாலையில் கூடப் படித்த
சினேகிதன் க்ருஷ்ணனைப் பார்க்க
குசேலர் பல வருஷங்கள் காத்திருந்தார் !

 16100 ஸ்தீரீ ரத்தினங்கள் க்ருஷ்ணனின்
தரிசனத்திற்காக நரகாசுரன் கோட்டையில்
சில வருஷங்கள் காத்திருந்தார்கள் !

ஸ்வாமி நம்மாழ்வார் திருக்கண் மலர,
திருவாய் மலர, அவருடைய பெற்றோர்
  16 வருஷங்கள் காத்திருந்தனர் !
  

திருநீர்மலை திவ்யதேசத்தில், நீர்வண்ணரை
சேவிக்க திருமங்கையாழ்வார்
6 மாதங்களாக காத்திருந்தார் !

ஸ்வாமி இராமானுஜர்,ஸ்ரீ ரங்கநாதனின்
தரிசனத்திற்காக, மேல்கோட்டையிலிருந்து
12 வருஷங்கள் காத்திருந்தார் ! 

ராமனுக்கு கோயில் கட்டி,இருண்ட
 சிறைச்சாலையில் பத்ராசல ராமதாசர்
பல வருஷங்கள்  காத்திருந்தார் !

பல கோடி ராம நாமத்தை ஜபித்து,
ஸ்ரீ ராமனின் தரிசனத்திற்காக
தியாகராஜர் பல வருஷங்கள் காத்திருந்தார் !

க்ருஷ்ண தரிசனத்திற்காக, கோவர்தனத்தை
ப்ரதக்ஷிணம் செய்து கொண்டு, ஹரிவ்யாஸர்
 24 வருஷங்கள் காத்திருந்தார் !

நம் ப்ரேமஸ்வரூபினி ராதிகாராணி
எந்த நிமிஷமும், க்ருஷ்ணனுக்காகவே
காத்திருக்கின்றாள் !

நம்முடைய குருஜீ அம்மாவும்,
நீ பக்தி செய்வதற்காக
காத்திருக்கின்றார்கள் !


எத்தனையோ பக்தர்கள் காத்திருந்தார்கள் !
நீயும் யோசனை செய் ! 
தினம் தினம் இன்னும் பலர்
காத்திருக்கின்றார்கள் !

நீயும் பல சமயங்களில் 
பல விஷயங்களுக்காகக்
காத்துக் கொண்டுதானிருக்கிறாய் !

இனி அந்த சமயங்களில் இப்படி
காத்திருந்தவர்களை
நினைத்துக் கொள் !
  
அப்பொழுது நீயும் பகவானுக்காக
காத்திருந்ததாக பகவான் 
நினைத்துவிடுவான் !

பக்தர்களையும் நினைத்தது போலாயிற்று!
பகவானுக்காகவும் காத்திருந்தது போலாயிற்று!


நீ எங்கு வேண்டுமானாலும்,
எந்த விஷயத்திற்காகவாவது,
யாருக்காவது காத்திரு !
அது முக்கியமில்லை ! 
மனம் எங்கிருக்கிறது என்பதே முக்கியம்! 

பொழுதும் வீணாகாமல், 
ஒரு சிரமம் இல்லாமல்
 உனக்கு நீயே 
ஒரு நன்மை செய்து கொள் !

இப்படி நினைப்பதும் பக்திதான் !
"ஸ்மரண பக்தி" 

இதில் ஒன்றும் கஷ்டம் இல்லையே ? ! ? 
 




0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP