ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 16 டிசம்பர், 2009

மார்கழியே நீ வாழீ !





ராதேக்ருஷ்ணா


மார்கழியே வருக !
க்ருஷ்ண குளிரே வருக !
பனியின் முத்துச்சரமே வருக !


எத்தனை தெய்வங்கள்
வந்தாலும்
எங்கள் க்ருஷ்ணனுக்கு
சமமாகுமோ !
எத்தனை மாதங்கள்
வந்தாலும்
எங்கள் மார்கழிக்கு
ஈடாகுமோ !

வாழ்வில் எத்தனைபேர்
வந்தாலும்
மார்கழியின் வருகை
விசேஷமானதே !

க்ருஷ்ணனே பகவத் கீதையில்
"மாதங்களில் நான் மார்கழி"
என்று சொல்லிப் பரவசப்பட்ட
க்ருஷ்ணரூபியான, கருணையே
குளிரான,தேவி மார்கழியே நீ வாழீ !


கோபிகைகள் க்ருஷ்ணனுக்காக
 விடியற்காலையில், நடுங்கும் குளிரில்,
யமுனையின் கரையில், 
காத்யாயனி விரதம் இருந்த,
தேவி மார்கழியே நீ வாழீ !

கோபிகைகளின் ஆடையைக்
கவர்ந்து சென்று க்ருஷ்ணன்
மரத்திலமர, கோபிகைகளின்
ஆனந்தத்தை அதிகப்படுத்தின,
தேவி மார்கழியே நீ வாழீ !

ராசக்ரீடையை உங்களோடு
ஆடுவேன் என்று ராதிகாவுக்கும்,
கோபிகைகளுக்கும் க்ருஷ்ணன்
சத்தியம் பண்ணிக்கொடுத்த,
தேவி மார்கழியே நீ வாழீ ! 

ஆண்டாள், கோபீ பாவத்தில்,
ஸ்ரீவில்லிப்புத்தூரை, ப்ருந்தாவனமாகப் பாவித்து,திருப்பாவை விரதம் இருந்து,
பகவானையும் துயிலுணர வைக்கும்,
தேவி மார்கழியே நீ வாழீ !

சூடிக்கொடுத்தச் சுடர்கொடியின்,
செங்கனிவாயால், கலியுக அல்ப
ஜீவன்களுக்கும், நாம மஹிமையைச்
சொல்லும் திருப்பாவையைத் தந்த
தேவி மார்கழியே நீ வாழீ !

மும்மதம் அழிய ஒரே வழி,
தொண்டர் தாள் பரவுவதேயென்று,
எல்லோருக்கும் புரிய வைத்த, 
தொண்டரடிப்பொடியாழ்வாரைத்
தந்த தேவி மார்கழியே நீ வாழீ ! 
 
பரந்தாமன் பகட்டுக்கு மயங்கமாட்டான்,
பக்தியில் தன்னையே தருவான் என்பதை
ஏழைக் குசேலன் தந்த அவலைக் கொண்டு
உலகில் நிரூபணம் செய்த 
தேவி மார்கழியே நீ வாழீ !

அம்புப்படுக்கையில் படுத்துக்கிடந்த பீஷ்மர்,
 பகவான் ஸ்ரீ க்ருஷ்ணனை சாக்ஷியாக வைத்துக்கொண்டு, தர்மருக்கு
சஹஸ்ர நாமம் சொன்ன
தேவி மார்கழியே நீ வாழீ !

தக்ஷிணாயன புண்ணியகாலத்தில்,
பகவான் அரிதுயிலுணர்ந்து,
எல்லோருக்கும் வைகுண்ட ப்ராப்தி
தருகின்ற வைகுண்ட ஏகாதசி தரும்,
தேவி மார்கழியே நீ வாழீ !

தேவி மார்கழியே !
உன் பெருமையைப் பேச,
ஆயிரம் நா கொண்ட ஆதிசேஷனாலும்
முடியாதே !

அறியாத பிள்ளையின்
மழலை வார்த்தையால்
உன் பெருமையை
உள்ளபடி பேசத்தான் முடியுமோ !

எனக்கு ஆசிர்வாதம் தா !
உன் மடியில் நான்
க்ருஷ்ணனை அனுபவிக்க
எனக்கு திடமான பக்தியைத் தா !

கோபீ பாவம் தா !
ஆண்டாளின் கனவைத் தா !
தொண்டரடிப்பொடியின் அன்பைத் தா !

என் மனம் ப்ருந்தாவனமாக மாற 
க்ருஷ்ண பக்தி தா !
ராதாக்ருஷ்ண பக்தி தா !

மார்கழிக்கு நமஸ்காரம் . . . 


 






0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP