ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 19 டிசம்பர், 2009

ரகசியமாகச் சொல்வாயா !





ராதேக்ருஷ்ணா

ஆஞ்சனேயா !
ஹனுமந்தா !
வாயுகுமாரா !
வானரோத்தமா !
ராமதாசா !
எனக்கு உன்னிடம்
சில ரகசியங்கள் கேட்க ஆவல் !

உன் காதோரம் சொல்லி
வைக்கிறேன் !

எனக்குப் பக்குவம் வரும்போது
நீ மறக்காமல் சொல்லிவிடு ! 

ஜடாமுடியும், மரவுரியும் தரித்த
வனவாச ராமனின் ழகைக் கண்ட
உன் கண்ணின் சுகத்தை,
 அன்பு ஆஞ்சனேயா ! 
எனக்கு ரகசியமாகச் சொல்வாயா !

மனித வேடம் தரித்த ராமனிடமே,
ப்ரம்மச்சாரி வேடம் தரித்துப் பேசி,ராமனின்
பதிலைக் கேட்ட உன் காதின் சுகத்தை
சொல்லின் செல்வா ஆஞ்சனேயா !
எனக்கு ரகசியமாகச் சொல்வாயா !




ஒரு தோளில் ராமனையும்,
மறு தோளில் லக்ஷ்மணனையும்,
தூக்கிச் சென்ற தோளின் சுகத்தை,
பலசாலி ஆஞ்சனேயா !
எனக்கு ரகசியமாகச் சொல்வாயா !

ராமன் உன்னை அழைத்து,
உன்னிடம் தன் மோதிரம் தந்து,
சீதையிடம் தரச் சொல்ல, அதை வாங்கின
உன் கையின் சுகத்தை,
மாருதிராயா ஆஞ்சனேயா !
எனக்கு ரகசியமாகச் சொல்வாயா !

சீதையைத் தேடி இலங்கைக்குத் தாவ,
"ஜய் ஸ்ரீ ராம்" என்ற நாமத்தை
உரக்கச் சொன்ன உன் நாவின் சுகத்தை
ராமதாசனே ஆஞ்சனேயா !
எனக்கு ரகசியமாகச் சொல்வாயா !

அசோகவனத்தில் சீதா பிராட்டியைக்
கண்ட, அந்த நிமிஷங்களில்,
உன் மனதின் பரமானந்தத்தை,
காதல் தூதனே ஆஞ்சனேயா !
எனக்கு ரகசியமாகச் சொல்வாயா !

ராமனின் வக்ஷஸ்தலத்தில் குடிகொண்ட, 
சீதையிடமே ராமாயணம் பேசின,
உன் திருவாயின் சந்தோஷத்தை,
அசோக ஆஞ்சனேயா !
எனக்கு ரகசியமாகச் சொல்வாயா !

தாயாரையும், பெருமாளையும் பிரித்த
பொல்லா அரக்கனைப் பார்த்த
சமயத்தில் உன் மனதின் கோபத்தை,
ராம தூத ஆஞ்சனேயா !
 எனக்கு ரகசியமாகச் சொல்வாயா !

சீதையை பிரியாத ராமனிடம் 
"கண்டேன் சீதையை"என்று சொல்லி,
 சீதாவின் சூடாமணியைத்தர,
ராமனின் ஆலிங்கனத்தை
அனுபவித்த உன் திருமேனியின் சிலிர்ப்பை,
ராம பத்ர ஆஞ்சனேயா !
எனக்கு ரகசியமாகச் சொல்வாயா !

விபீஷணனுக்காக நீ ராமனிடம் பேச,
உலகிற்கு ராமன் சரணாகதி ரஹஸ்யத்தை
சொன்ன சமயத்தில் உன் கண்ணில்
வழிந்த ஆனந்தகண்ணீரின் சுவையை,
பக்தவத்சல ஆஞ்சனேயா !
எனக்கு ரகசியமாகச் சொல்வாயா !


 ராமனின் தர்ம யுத்தத்தில்,
அழிவேயில்லாத ராம லக்ஷ்மணருக்காக,
சஞ்சீவினி மலையைக் கொணர்ந்த,
வீரம் செரிந்த உன் புஜத்தின் சுகத்தை,
சஞ்சீவினி ஆஞ்சனேயா !
எனக்கு ரகசியமாகச் சொல்வாயா !

தாசரதி ராமனின் வெற்றியை,
சீதையிடம் சொல்லி, அரக்கியரை 
வதம் செய்ய நீ வரம் கேட்க, சீதை
உன்னை கடிந்துகொள்ள,
வேகமாகத் துடித்த உன் இதயத்துடிப்பை,
 ஸ்ரீ ராம ஜய ஆஞ்சனேயா !
எனக்கு ரகசியமாகச் சொல்வாயா ! 
 
பரத்வாஜரின் ஆசிரமத்தில், உன்
பகவான் ஸ்ரீ ராமனோடு ஓரிலையில்,
விருந்து உண்டபோது, புருஷோத்தமனிடம்
தோற்று,காணாமல் போன உன் ஆண்மையின்
பரிதவிப்பை, வீர ஆஞ்சனேயா !
எனக்கு ரகசியமாகச் சொல்வாயா ! 

சக்ரவர்த்தி திருமகனின் பட்டாபிஷேகத்தில்,
உன் இதயத்தில் உலா வந்த உன் ராமனின்
அழகில் கிறங்கிய உன் இந்திரியங்களின்,
குதூகல வைபவத்தை,
அதிசுந்தர ஆஞ்சனேயா !
 எனக்கு ரகசியமாகச் சொல்வாயா !

எல்லோரும் கைங்கர்யத்தைத்
தட்டிப் பறிக்க நினைக்க, அழகன்
கொட்டாவி விடும்போது சொடுக்கு
போடும் கைங்கர்யத்தைச் செய்த,
உன் விரலின் அற்புத பாக்கிய சுகத்தை,
கைங்கர்ய சிகாமணி ஆஞ்சனேயா !
எனக்கு ரகசியமாகச் சொல்வாயா !

   இவையில்லாமல் நீ
அனுபவிக்கும் ராம ரஹஸ்யங்கள்
பலகோடி......
எனக்கு உன் ராமன் வேண்டாம்....
எனக்கு உன் அனுபவம் மட்டும் போதும்....

என் க்ருஷ்ணனை,
என் ராதிகாவை,
நான் அனுபவிக்க,
உன் வினயம் தேவை...
உன் பக்தி தேவை...
உன் த்ருடம் தேவை...
உன் பலம் தேவை...
உன் மனம் தேவை...

அதை நீ எனக்கு ரகசியமாகச்
சொல்லிவிடு....

அது போதும்....

நானும் வானரம் தான்....

ஆனால் உன்னைப்போல்
 நல்ல வானரமில்லை...

உன்னைப்போல்
பக்த
வானரமில்லை....

என் ராதிகா க்ருஷ்ணனுக்கு
சேவா குஞ்சத்தில்
கைங்கர்யம் செய்யும்
ஒரு க்ருஷ்ணவானரமாக,
ராதா சூடாமணியைத் தாங்கி,
 மாட்டுக்காரனிடம்,
"கண்டேன் ராதையை"
என்று சொல்லி ஒரு திருட்டு
ஆலிங்கனம் அடைய
உன்னைப் ப்ரார்த்திக்கின்றேன்  . . .

ராதிகாவும்,
"ஹே கோபால வானரமே!
க்ருஷ்ணனை சீக்கிரம் வரச் சொல்!
என்று தன் காதலை என்னிடம்
சொல்ல,
அதைக் கேட்டு குதித்து,
குட்டிக்கரணம் அடித்து,
ராதிகாவை சிரிக்க வைக்கும்
ஒரு வானரமாக நான்
மாற 
எனக்கு ப்ரேம பக்தியை
க்ருஷ்ணாஞ்சனேயா ! 
ரகசியமாகச் சொல்வாயா !

 
 

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP