ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 5 ஜனவரி, 2010

அவதாரம் . . .



ராதேக்ருஷ்ணா


பகவான் க்ருஷ்ணன்
தர்மத்தை நிலை நாட்டுவதற்காக,
அதர்மத்தை அழிப்பதற்காக,
பக்தர்களுக்காக
யுகங்கள் தோறும் அவதரிக்கின்றான் !

ஒரு யுகத்தில் மீனாக வந்தான் !
ஒரு சமயத்தில் ஆமையாக வந்தான் !
ஒரு காலத்தில் வராஹமாக வந்தான் !
ஒரு சந்தர்ப்பத்தில் நரசிம்மனாக வந்தான் !
ஒரு நேரத்தில் வாமனனாக வந்தான் !
ஒரு அவசியத்தில் பரசுராமனாக வந்தான் !
ஒரு வேகத்தில் ராமனாக வந்தான் !
ஒரு தேவையில் ஹயக்ரீவனாக வந்தான் !
ஒரு ரஹஸ்யத்தில் மோஹினியாக வந்தான் !
ஒரு தவிப்பில் சனத்குமாரர்களாக வந்தான் !
ஒரு ஆசையில் வேதவ்யாசராக வந்தான் !
ஒரு கணக்கில் கபிலராக வந்தான் !
ஒரு கோபத்தில் நர-நாராயணனாக வந்தான் !
 ஒரு க்ருபையில் ஸ்ரீ ஹரியாக வந்தான் ! 
ஒரு யோசனையில் சுகப்ரும்மமாக வந்தான் !
ஒரு அவசரத்தில் தன்வந்த்ரியாக வந்தான் !
ஒரு காரணத்தில் விஷ்ணுவாக வந்தான் ! 
ஒரு காதலில் க்ருஷ்ணனாக வந்தான் ! 

இதுபோல் பல கோடி அவதாரங்கள்
பகவான் க்ருஷ்ணன்
எடுத்துவிட்டான் !

இன்னும் பல கோடி அவதாரங்கள்
பகவான் க்ருஷ்ணன்
எடுத்திருக்கிறான் !

கலியுகத்திலும் பல கோடி
அவதாரங்கள் உண்டு !

மனிதரூபமில்லாமல்
பலமுறை
கலியுகத்தில்,இந்த பூமியில்
வந்திருக்கிறான் !

நாராயண தீர்த்தரின்
வயிற்று வலியை தீர்க்க 
வெள்ளைப் பன்றியாக வந்தான் !

ஏகநாதரிடம் பாலைவனத்தில் 
கங்கா ஜலம் வாங்கிக் குடிக்க
கழுதையாக வந்தான் !

ஹாத்தீ ராம் பாவாஜீயை நிரூபணம்
செய்ய சிறைச்சாலையில்
யானையாக வந்தான் !

நாமதேவரிடம் ரொட்டியையும்,
சர்க்கரை கலந்த நெய்யையும் சாப்பிட
நாயாக வந்தான் !

கனகதாசரின் பக்தியை நிரூபிக்க,
பக்தர்கள் கூட்டத்தின் நடுவே
பாம்பாக வந்தான் !

கர்மடாதேவியின் கற்பை
மிலேச்சனிடமிருந்துக் காப்பாற்ற
சிங்கமாக வந்தான் !

வாதிராஜரின் பக்தியில் மயங்கி,
வயலில் விளையாடும்
குதிரையாக வந்தான் !

துகாராமை ஆலிங்கனம் செய்து,
அவருடைய பக்தியைப் பார்க்க
கருநாகமாக வந்தான் !

பக்த வேஷமிட்ட கயவனிடமிருந்து
சுரசுரீயைக் காப்பாற்ற
புலியாக வந்தான் !

பூந்தானத்தின் கபடமற்ற பக்தியை
மற்றவர்களுக்குப் புரிய வைக்க
எருதாக வந்தான் !

இன்னும் எத்தனையோ
சந்தர்ப்பங்களில்
எத்தனையோ அவதாரங்கள்
எடுத்திருக்கிறான் !

சில வருஷங்களுக்கு முன்

கோபாலவல்லியின் தாபத்தைத்
தணிக்க சந்திரபாகா நதிக்கரையில்
மாடு ரூபத்தில் வந்தான் !

ஒவ்வொரு நாளும்,
 ஒவ்வொரு இடத்தில், 
ஒவ்வொரு வேஷத்தில்
க்ருஷ்ணன் 
அவதரித்துக் கொண்டுதான்
இருக்கிறான் !

பல சந்தர்ப்பங்களில் நீ தான்
தவற விட்டு விட்டாய் !

இனியாவது பக்தியோடு
உலகத்தில் சுற்றித் திரிந்து கொண்டிரு !

ஒரு நாள் உன் க்ருஷ்ணன் 
உனக்காக 
 எடுக்கின்ற அவதாரத்தைப்
பார்த்தே தீருவாய் . . .

அதற்காக கற்பனையில் அலையாதே . . .

நாம ஜபத்தோடு,
க்ருஷ்ண விரஹத்தோடு,
திடமான பக்தியோடு,
வினயத்தோடு,
உலகில் வாழ்ந்து கொண்டிரு . . .

ஒரு நாள் பார்ப்பாய் !




0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP