ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 19 ஜனவரி, 2010

நூறே நீ வளர்க!



ராதேக்ருஷ்ணா

நூறே நீ வாழ்க!
நூறே நீ வளர்க !
நூறே நீ நீள்க !

நூறு என்ற எண்ணிக்கை
மிக விசேஷமானது !

நூறு என்ற எண்ணிக்கை
உலகாயத வாழ்க்கையிலும்
கொண்டாடப்படுகிறது !

நூற்றுக்கு நூறு
வாங்குவதே சரி என்பதுதான்
கணிதத்தின் பலம் !

தரத்திலும் நூறு சதவிகிதம்
என்று நூறையே
விசேஷமாகக் கொள்கிறோம் !

நினைத்தவுடன் யாராவது வந்தாலும்
"ஆயுசு நூறு" என்பதே
உலக வழக்கம் ! 

 இந்து தர்மத்திலும்
நூறு என்பது மிக முக்கியமான
இடத்தைப் பிடித்திருக்கிறது !

சில ஆன்மீக நூறை அனுபவிக்கலாமா !

வேதமும் "சதமானம் பவதி"
என்று நூறு வயது வாழ
வாழ்த்துகிறது !

ஸ்ரீ ராமனும்,ஆஞ்சனேயருக்கு
108 உபநிஷதங்கள் உபதேசித்தானென்று
முக்திகோபநிஷத்து சொல்கிறது !

ஸ்ரீ க்ருஷ்ணனும்,த்ருதராஷ்டிரனின்
100 புதல்வர்களை வதம் செய்து,
பஞ்ச பாண்டவர்களை வாழ வைத்தான் ! 

ஸ்ரீ வைஷ்ணவ திவ்ய தேசங்களும்
108 என்ற எண்ணிக்கையில்தான்
இருக்கிறது ! 

முதலாழ்வார்களும் பகவானைப்பற்றி
ஆளுக்கொறு நூறு பாசுரம்,
நூற்றந்தாதியாகப் பாடினார்கள் !

திருமழிசை ஆழ்வாரும் பகவத் அனுபவத்தை
"திருச் சந்த விருத்தமாக" 120 பாசுரங்களில்
பாடி சமர்ப்பித்தார் ! 

ஸ்வாமி நம்மாழ்வாரும் "திருவிருத்தம்"
என்று ரிக் வேத சாரத்தை
 100 பாசுரங்களில் பாடினார் ! 

குலசேகர ஆழ்வாரும்
பெருமாள் திருமொழியாக
105 பாசுரங்கள் பாடினார் !

கோதை நாச்சியாரும் தன் காதலை 
143 பாசுரங்களில்
"நாச்சியார் திருமொழியாக" சொன்னதால்
"ஒரு நூற்று நாற்பத்து மூன்று உரைத்தாள்
வாழியே" என்று வாழித்திருநாமம் பெற்றாள் !

ஆண்டாளும் திருமாலிருஞ்சோலை நம்பிக்கு
100 தடா அக்கார அடிசிலும்,
100 தடா வெண்ணையும் தருவதாகவே
ப்ரார்த்தித்தாள் !

திருமங்கையாழ்வாரும்,திரு நறையூர்
பெருமாளைப் பற்றி 100 பாசுரங்கள்,
பெரிய திருமொழியில் பாடிப்
பரவசமடைந்தார் !

கம்பனும் "சடகோப நூற்றந்தாதி"
என்று நம்மாழ்வாரைப்பற்றி 100
பாசுரங்கள் பாடின பிறகே,
கம்ப ராமாயணத்தை, அரங்கன்
ஸ்ரீ ரங்கத்தில் அரங்கேற்றினான் ! 

ஸ்வாமி ராமானுஜரும், திருமாலிருஞ்சோலை நம்பிக்கு
 100 தடா அக்கார அடிசிலும்,வெண்ணையும் சமர்ப்பித்தே ஆண்டாளுக்கு 
"நம் கோயில் அண்ணன்" ஆனார் !

திருவரங்கத்து அமுதனாரும்
"இராமானுச நூற்றந்தாதி" என்று
ஸ்வாமி ராமானுஜரின் பெருமையை
108 பாசுரங்களாகப் பாடினார் !

மஹாராஜா ஸ்வாதித் திருநாளும்
அனந்த பத்ம நாப ஸ்வாமியின் லீலையை
"பத்மநாப சதகம்" என்று
100 ஸ்லோகங்களில்தான் பாடினார் !

நிகமாந்த மஹா தேசிகரும்
திருமலை திருப்பதி ஸ்ரீநிவாஸனின்
கருணையை "தயா சதகம்" என்று
100 ஸ்லோகங்களில் புகழ்ந்தார் !

பூந்தானமும் ஸ்ரீ க்ருஷ்ண லீலையை
"ஹரி ஸ்தோத்ரம்" என்று 108 லீலைகளைப்
பாடி மகிழ்ந்தார் !

குலசேகர ஆழ்வார் இந்த புண்ணிய
பூமியில் 120 வருஷங்கள் வாழ்ந்தார் !

தொண்டரடிப்பொடி ஆழ்வார் இந்த
நிலத்தில் 105 வருஷங்கள் வாழ்ந்தார் ! 

திருமங்கை ஆழ்வார் இந்த அற்புதமான
தேசத்தில் 105 வருஷங்கள் வாழ்ந்தார் !

ஸ்வாமி ஆளவந்தார் இந்த உலகத்தில்
125 வருஷங்கள் வாழ்ந்தருளினார் !

திருவரங்கப் பெருமாளரையர் இந்த
உத்தம உலகத்தில் 115 வருஷங்கள் வாழ்ந்தார் !

திருக்கோஷ்டியூர் நம்பி மனித தேகத்தில்
இந்த உலகில் 105 வருஷங்கள் வாழ்ந்தார் ! 

ஸ்வாமி இராமானுஜர் இந்த பூமண்டலத்தில்
120 வருஷங்கள் பகவத் த்யானத்தில் வாழ்ந்தார் !

கூரத்தாழ்வான் இந்த பாரத பூமியில்
108 வருஷங்கள் வாழ்ந்து திருநாடடைந்தார் !

எம்பார் கோவிந்தர் இந்த உன்னத லோகத்தில்
105 வருஷங்கள் வாழ்ந்து பக்தியில் திளைத்தார் !

திருவரங்கத்து அமுதனார் இந்த பூலோகத்தில்
108 வருஷங்கள் பக்தியோடு வாழ்ந்திருந்தார் !

வேதாந்த தேசிகர் இந்த லீலா விபூதியில்
105 வருஷங்கள் பக்தியைப் பரப்பினார் !

மணவாள மாமுனிகள் இந்த புண்ணிய பூமியில்
125 வருஷங்கள் வாழ்ந்து சாதித்தார் !

திருவனந்தபுரம் அனந்தபத்மநாப ஸ்வாமிக்கும்
108 தங்க கலசங்களில் கலசாபிஷேகம்
செய்வது ஒரு வைபவமாகும் !

இன்னும் ஒரு கோடி வைபவம்
நூறிற்குச் சொல்ல முடியும் !

ஏன் இத்தனை நூறு !

இது 100வது ஆனந்தவேதம்!
அதனால் நூறின் மாஹாத்மியம் சொன்னோம் !

இந்த 100வது ஆனந்தவேதத்தில்
ஒரு
உளமார்ந்த ப்ரார்த்தனை !

குருஜீ அம்மாவும்,
குருஜீ அப்பாவும்,
100 ஆண்டுகள் வாழ
உன்னதமான ஆசார்யபுருஷர்களின்
திருவடிகளில்
ப்ரார்த்திக்கிறோம் ! ! !

இந்த 100 ஆனந்தவேதத்தையும்
சத்குரு சரண கமலங்களில்
சமர்ப்பணம் செய்கிறோம் !






நூறு இன்னும் முடியவில்லை !

இன்னும் பல நூறுகள்
க்ருஷ்ண க்ருபையால் வரும்...

ப்ரம்மனின் 100 கோடி
ராமாயண ஸ்லோகம் போலே
இதுவும் வளர
ராதிகாவிடத்தில் ப்ரார்த்திக்கிறேன் ! ! !

அடியேன் இருக்கிறேனோ
இல்லையோ
ராதேக்ருஷ்ணா சத் சங்கமும்,
குருஜீ அம்மாவின் லக்ஷியங்களும்
நீடூழி வாழ வேண்டும் !
போற்றி...போற்றி...போற்றி... 

எப்படியும் க்ருஷ்ணன் நடத்திக் கொடுப்பான் !


0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP