கள்ளனின் கண்ணம்மா !
உந்து மதமுடைய
யானையை உடையவன்
நந்தகோபன் என்றே
சொன்னாயடி,
கள்ளனின் கண்ணம்மா !
ஓடாத தோள் உடையவன்
யானையும் அடக்குபவன்
நந்தகோபன் என்றே
சொன்னாயடி,
கள்ளனின் கண்ணம்மா !
நந்தகோபன் மருமகளாய்
வாழ பாக்கியம் செய்தவள்
நப்பின்னை என்றே
சொன்னாயடி,
கள்ளனின் கண்ணம்மா !
வாசம் வீசும் குழலாள்,
கண்ணனின் வாசம்
வீசும் நப்பின்னை என்றே
சொன்னாயடி,
கள்ளனின் கண்ணம்மா !
கண்ணனைத் தர
கதவைத் திற, அதற்கு நீ
மனதைத் திற நப்பின்னாய்
என்றாயடி,
கள்ளனின் கண்ணம்மா !
வந்த கோழிகளும்
சொந்தமான கண்ணனை
சந்தமாய் அழைப்பதை
சொன்னாயடி,
கள்ளனின் கண்ணம்மா !
மாதவிப் பந்தலில்,
காதலில் கூவும் குயில்களின்,
நாதத்தில் கண்ணனை
அனுபவித்தாயே,
கள்ளனின் கண்ணம்மா !
பந்தை விரல்களில்
பந்தமாய் கொண்டு
காந்தமாய் கண்ணனை
கொண்டவளை சொன்னாயே
கள்ளனின் கண்ணம்மா !
மைத்துனனோடு மிதுனமான
மைத்தடம் கண்ணழகியிடம்
பைத்தியமாய் அவன்
நாமம் சொன்னாயே
கள்ளனின் கண்ணம்மா !
செந்தாமரை கையினால்,
பாந்தமான வளையல்களோடு,
வந்து திறக்கக்
கெஞ்சினாயே,
கள்ளனின் கண்ணம்மா !
மகிழ்ச்சி நீ தருவாய்
முகிழ்த்த நீ வருவாய்
நெகிழ்வு நீ அருளாய்
திகழ வைப்பாய் என்றாயே
கள்ளனின் கண்ணம்மா !
உடையவர் ராமானுஜரும்
உடையவன் கண்ணனை
உடையவள் நப்பின்னையை,
உன்னுடை அருளால் கண்டாரே,
கள்ளனின் கண்ணம்மா !
கண்ணம்மா ! கண்ணம்மா !
கள்ளனின் கண்ணம்மா !
பாரதத்தின் கண்ணம்மா !
காதலின் கண்ணம்மா !
பக்தியின் கண்ணம்மா !
நீயே கண் அம்மா !
கள்ளனின் கண்ணம்மா !
கள்ளமெல்லாம் எமைவிட்டொழிய,
உள்ளமெல்லாம் உனைநினைத்து,
துள்ளும் இளமையெலாம்,
கள்ளனுக்காய் தர நீ
கண் பாராய் கண்ணம்மா !
0 கருத்துகள்:
கருத்துரையிடுக