ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 4 செப்டம்பர், 2026

பெரியது...

🙏🦚🦜🛕🇮🇳🕉️🪷

க்ருஷ்ணா !
நான் தேவகியோ வசுதேவரோ அல்ல !

க்ருஷ்ணா !
நான் யசோதையோ நந்தகோபனோ அல்ல !

க்ருஷ்ணா !
நான் கோபியோ, கோபனோ அல்ல !

க்ருஷ்ணா !
நான் மாடோ கன்றோ அல்ல !

க்ருஷ்ணா !
நான் கர்கரோ சாந்தீபனியோ அல்ல !

க்ருஷ்ணா !
நான் மயில்பீலியோ, புல்லாங்குழலோ அல்ல !

க்ருஷ்ணா !
நான் யமுனையோ, கோவர்த்தனமோ அல்ல !

க்ருஷ்ணா !
நான் அக்ருரரோ, விதுரரோ அல்ல !

க்ருஷ்ணா !
நான் சுதாமாவோ, அர்ஜுனனோ அல்ல !

க்ருஷ்ணா !
நான் நல்லவனா கெட்டவனா தெரியவில்லை !
நான் பாபியா புண்ணியனா தெரியவில்லை !
நான் முட்டாளா அறிவாளியா தெரியவில்லை !
நான் அசுரனா, பக்தனா தெரியவில்லை !

ஆனால் நீ பெரியவன் !
இந்த ஆவணி பெரியது !
இந்த அஷ்டமி பெரியது !
இந்த ரோகிணி பெரியது !
இந்த நாள் பெரியது !
இந்த இரவு பெரியது !

உன் கருணை பெரியது !
உன் உள்ளம் பெரியது !
உன் அன்பு பெரியது !
உன் எண்ணம் பெரியது !

என்னையும் உன்னிடம் வைத்துக்கொள்ளும் இந்த உரிமை பெரியது !

ஏதோ ஒரு ஜன்மாவில் இந்த ஜீவனும் உனக்காக மட்டுமே வாழும் வரம் தா...

எனக்காக, என் சுயநலத்திற்காக, ஆசைக்காக, காமத்திற்காக மட்டுமே வாழ்ந்தாலும் என்னையும் உன்னவனாக ஏற்கும் உன் திருவடிகளில் ஆத்ம சமர்ப்பணம்...

இன்று நான் உன்னை நினைக்க அன்று நீ பிறந்தனையோ...

இன்னும் இன்னும் பிறந்து வா....
என்னைப் போல் இங்கே கோடி கோடியாய் உண்டு...

உன் கருணையைத் தவிர போக்கிடம் அற்ற அல்ப ஜீவர்களின் உள்ளத்தை கொள்ளை கொள்ள வா...

ராதேக்ருஷ்ணா !

குருஜீ கோபாலவல்லிதாசன்
ஜன்மாஷ்டமி இரவு 11.40
4.9.26, வெள்ளி

🪷🕉️🇮🇳🛕🦜🦚🙏

Read more...

வியாழன், 27 ஆகஸ்ட், 2026

பரிமுகத்தோனே !

அற்புத ஞானத்தின் 
உருவான பரிமுகத்தோனே !

எல்லையில்லா ஆனந்தத்தின் சுரங்கமான பரிமுகத்தோனே !

படிகம் போல் வெண்ணிற
மேனியனே பரிமுகத்தோனே !

எல்லா வித்தைகளுக்கும்
ஆதாரமான பரிமுகத்தோனே !

வேதத்தை  மீட்டெடுக்கவே
அவதரித்த பரிமுகத்தோனே !

பிரமனுக்கு வேத ரகசியம்
அளித்த பரிமுகத்தோனே !

தேசிகருக்கு ஔடதகிரியில்
தரிசனம் தந்த பரிமுகத்தோனே !

வாதிராஜருக்கு கத்தரிக்காய்
தந்த பரிமுகத்தோனே !

இன்று நீ அவதரித்த நன்னாள்... 
நான் ஞானானந்தமாக நிர்மல இதயத்தோடு வாழ குதிரை வேகத்தில் அருள் செய்...
பரிமுகத்தோனே...

Read more...

புதன், 26 ஆகஸ்ட், 2026

ஸ்ரீ பத்மநாபா சரணம் !

ஸ்ரீ பத்மநாபா சரணம்!

துவாரகையில் திவாகர முனிக்குச் சிறுபிள்ளையாய் காட்சி தந்த 
என் செல்லமே...
ஸ்ரீ பத்மநாபா சரணம் !

அவரின் கோபம் பிடிக்காமல் அனந்தன் காட்டிற்குள் வந்து  ஒளிந்துகொண்ட என் சமத்தே...
ஸ்ரீ பத்மநாபா சரணம் !

உன்னைத் தேடி வந்த திவாகர முனிக்கு இலுப்பை மரத்தில் காட்சி தந்த என் ராஜாவே...
ஸ்ரீ பத்மநாபா சரணம் !

முனிக்காக 18 மைல் நீள 
உருவத்தை 18 அடியாகக் குறைத்த 
என் குஞ்சலமே...
ஸ்ரீ பத்மநாபா சரணம் !

வில்வமங்கள சாமியார் தந்த
கண்ணி மாங்காயை ஆசையாய் ஏற்றுக் கொண்ட என் தங்கமே... 
ஸ்ரீ பத்மநாபா சரணம் !

அனந்த புர நகரம் புக வினைகள் கெடும்  என்று சடகோபனுக்குச் சொன்ன  என் சாமியே...
ஸ்ரீ பத்மநாபா சரணம் !

அனிழம் திருநாள் ராஜாவின் திருப்படித்தானத்தை உகந்து 
ஏற்ற என் செல்வமே...
ஸ்ரீ பத்மநாபா சரணம் !

12008 சாளக்கிராம கடுசர்க்கரை யோக திவ்ய அனுக்ரஹ மூர்த்தியே, என் கண்ணே...
ஸ்ரீ பத்மநாபா சரணம் !

திருவோணத்தில் அவதரித்து, ஆதிசேஷனில் பள்ளிகொண்ட 
என் பிரிய ஆராவமுதே...
ஸ்ரீ பத்மநாபா சரணம் !

உனக்காகவே நான் !
எனக்காகவே நீ !
இதுவே வரம், தவம், சுகம் !
ஸ்ரீ பத்மநாபா சரணம் !

Read more...

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP