ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 25 ஜூன், 2026

கருடா...



கருடா !
ஆடி சுவாதியில்
அவதரித்தவனே !

கருடா !
கச்யபரின் தவத்தில்
தோன்றினவனே !

கருடா !
வினதையை விடுவிக்க
வந்தவனே !

கருடா !
அருணனின் தம்பியாய்
பிறந்தவனே !

கருடா !
அன்னைக்காக
அமிர்தத்தை
அபகரித்தவனே !

கருடா !
விஷ்ணுவின்
வரத்தால்
கொடியானவனே !

கருடா !
விஷ்ணுவுக்கும்
வரம் தந்து
வாகனமானவனே !

கருடா !
பகவானை எங்கும்
எப்போதும் சுமந்து
செல்பவனே !

கருடா !
நாராயணனின்
கட்டளைக்காக
சுமுகனை சுமப்பவனே !

கருடா !
கண்ணனின் மீது
வெய்யில் படாமல்
காப்பவனே !

கருடா !
வேதாந்த தேசிகருக்கு
காட்சி தந்து
உபதேசித்தவனே !

கருடா !
சந்த் துகாராமை
வைகுண்டத்திற்கு
அழைத்துச்
சென்றவனே !

கருடா !
என்னையும்
உன்னைப் போல்
பகவானுக்கும்
பக்தருக்கும்
அடிமையாய்
ஆக்கிவிடு !

கருடா !
உடலும் உள்ளமும்,
உயிரும் உணர்வும்,
பக்தியில் திளைத்திருக்க,
எனக்கு அருள் செய் !

நீ தான் விஷ்ணுவுக்கே வரம் தந்தவனாயிற்றே...
என்னையும் சுமுகனைப் போல் சுமந்து உன்னோடு எங்கும் திரியும் ஒரு வரம் தா...

Read more...

செவ்வாய், 3 மே, 2022

661. அக்ஷய திருதியை

🙏3️⃣🔥🛕📿👣🕉️🏔️🐚

 அக்ஷய திருதியை !

பரசுராமர் அவதார தினம் இன்று !
பரசுராமரைப்போலே தர்மத்திற்காக வாழும் வாழ்க்கை உனக்கு அமைய வாழ்த்துக்கள்....

வேதவியாசர் மஹாபாரதம் எழுதத்தொடங்கிய நாள் இன்று !
வேதவியாஸரைப் போன்று ப்ரும்மானந்தத்தில் நீ எப்போதும் திளைக்க வாழ்த்துக்கள் !

க்ருஷ்ணனுக்கு சுதாமா அவல் கொடுத்த தினம் இன்று !
சுதாமா போலே, நீ க்ருஷ்ணனுக்கு பிடித்தவை எல்லாம் தர வாழ்த்துக்கள் !

பகீரதன் தவத்தால் கங்கா தேவி பூமியை அடைந்த நாள் இன்று !
பகீரதன் போலே அசராத கலங்காத திடமான தவம் செய்ய உனக்கு வாழ்த்துக்கள் !

கண்ணனின் அண்ணன் பலராமன் அவதரித்த தினம் இன்று !
ஆதிசேஷன் போலே கண்ணனுக்கு சதா கைங்கரியம் செய்து கொண்டு நீ வாழ வாழ்த்துக்கள் !

பாண்டவர்கள் சூரியனிடமிருந்து அக்ஷய பாத்திரம் பெற்ற அற்புத நாள் இன்று !
பாண்டவர்கள் போலே க்ருஷ்ண சாந்நித்தியத்தோடு நீ வாழ வாழ்த்துக்கள் !

ஒரு ஏழைத்தாய் ஆதிசங்கரருக்கு நெல்லிக்காய் தந்த நாள் இன்று !
மஹாத்மாக்களுக்கு உன்னால் முடிந்ததை சமர்ப்பித்து, அவர்கள் ஆசியோடு நீ வாழ வாழ்த்துக்கள் !

அன்னபூரணி தேவி அவதரித்த அழகான நாள் இன்று !
உன் வம்சமே நிறைந்த  அன்னத்தோடு வாழ பரிபூரண ஆசிர்வாதங்கள் !

யமுனோத்திரி, கங்கோத்திரி கோயில்கள் திறக்கும் நாள் இன்று !
கங்கை யமுனை போல் பகவானின் சம்மந்தத்தோடு, உன் பரம்பரையே வாழ மனதார வாழ்த்துக்கள் !

வராஹ நரசிம்மர் உருவத்தை தரிசிக்கும் நாள் இன்று !
ப்ரஹ்லாதனைக் காத்த சிம்ஹாசலம் வராஹ நரசிம்மர் உன்னையும் உன் குடும்பத்தையும் காக்க ஆசீர்வாதங்கள் !

புரி ஜகந்நாதன் ரதம் செய்யும் பணி தொடங்கும் நாள் இன்று !
உன் மனமும் உடலும் ஜகந்நாதனும் அவன் பக்தர்களுக்கும் அனுபவிக்கும் ரதமாக மாற ஆசிகள் !

🙏3️⃣🔥🛕📿👣🕉️🏔️🐚

Read more...

சனி, 11 டிசம்பர், 2021

660. வாய்ப்பு

🙏🏼🇮🇳🛕🕉️👣📿🐚🪔🔥

🌱 *ஆனந்தவேதம்* 💐

_660. வாய்ப்பு !_

உலகில் ஜனனமும் மரணமும்
தினசரி நிகழ்வு !

நீயும் நானும் அப்படியே
பிறந்து வாழ்கிறோம் !

ஆனால் சிலரோ ஜனிப்பது,
நம்மை நெறிபடுத்தவே !

அந்தச் சிலரில், யாரோ ஒருவர் சாகாவரம் பெற்றவர் !

அந்த சாகாவரம் பெற்ற
ஒருவனே என் பாரதி !

எட்டயபுரம் தந்த 
தமிழ்ப்பித்தன் பாரதி !

காசி அனுபவித்த
ஞானக்கிறுக்கன் பாரதி !

பாண்டிச்சேரி அடைந்த
கவிதைச்சிற்பி பாரதி !

கடையம் பெற்ற
கடவுளின் துகள் பாரதி !

திருவல்லிக்கேணி கண்ட
சாரதிதாசன் பாரதி !

காலனை மிரட்டினவன் பாரதி !

கண்ணனை சேவகனாக்கியவன் பாரதி !

காளியை கேள்விகேட்டவன் பாரதி !

நெஞ்சுரம் கொண்டவன் பாரதி !

ரௌத்திரம் புரிந்தவன் பாரதி !

ஆங்கிலேயரின் சிம்மசொப்பனம் பாரதி !

மொழிகளையும், தேசத்தையும் 
ரசித்தவன் பாரதி !

வாழ்வே தவமாய் 
வாழ்ந்தவன் பாரதி !

அவனுக்கு இணை 
அவன் மட்டுமே !

பாரதியால் தமிழும்,
பாரதியால் பக்தியும்,
பாரதியால் தேசமும்,
புத்துணர்ச்சி பெற்றது !

பாரதி...
இந்தச் சொல்....
தமிழ் போதை தரும்...
தேச பக்தி தரும்...
உலகை ரசிக்க வைக்கும்...
கண்ணனை காதலிக்க வைக்கும்...

நல்லனவெல்லாம் தரும் ஒரு கற்பகவிருட்சம் என் பாரதி....

பாரதி...
உன் தோளோடு உரசி,
உன் சிரிப்பொலியில் சிலிர்த்து,
உன்னோடு தமிழ் குடித்து,
உன்னோடு இயற்கையை ரசித்து,
உன்னோடு கோபத்தீயில் ஜொலித்து,
உன்னோடு காடு மலை கடலெல்லாம் பார்த்து,
உன்னோடு உண்டு,
உன்னோடு தூங்கி,
உன்னோடு எழுந்து,
உன்னருகே ஒரு தோழனாக வாழ...
ஒரு வாய்ப்பு தா....

©குருஜீ கோபாலவல்லிதாஸன்
பாரதி பிறந்த நாள் !
11.12.21, சனிக்கிழமை

🙏🏼🔥🪔🐚📿👣🕉️🛕🇮🇳

Read more...

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP