ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 9 பிப்ரவரி, 2010

இந்த சமயத்தில் !

ராதேக்ருஷ்ணா

வாழ்க்கையில் இழந்தால்
சம்பாதிக்க முடியாதது
நேரம் மட்டுமே !

ஒவ்வொரு நிமிஷமும்
பலகோடி ரூபாயை விட
மதிப்புடையது !

எப்பேற்பட்ட ஞானியானாலும்,
கடந்து போன ஒரு நொடியை
கொண்டு வரவே முடியாது !

தெய்வத்தையே ப்ரத்யக்ஷமாக
தரிசித்தாலும், இழந்த நேரம்
இழந்ததுதான் !

ஒவ்வொரு நொடிப்பொழுதும்,
உலகில் பல காரியங்கள்
அரங்கேறிக்கொண்டுதானிருக்கிறது !

ஒரு நொடியில் உலகில்
என்னவெல்லாம் நடக்கிறது தெரியுமா ?

இந்த சமயத்தில் உலகம் முழுவதும்
என்ன நடக்கிறது என்பதைக்
கொஞ்சம் பார்ப்போமா . . .

இந்த சமயத்தில் உலகில் பல
தாய்மார்களுக்கு ப்ரசவத்தில்
குழந்தைகள் பிறந்துகொண்டிருக்கின்றன !

இந்த சமயத்தில் எத்தனையோ பேர்
தங்கள் உடலை விட்டு,மரணத்தை
அடைந்துகொண்டிருக்கிறார்கள் !

இந்த சமயத்தில் யாரோ சிலர்,
அடுத்தவரின் பொருளை
கொள்ளையடித்துக் கொண்டிருக்கின்றனர் !

இந்த சமயத்தில் யாரோ சிலர்
சில திருடர்களை விரட்டிப் பிடித்துக்
கொண்டிருக்கிறார்கள் !

இந்த சமயத்தில் சிலர் மிக
சிரத்தையோடு தன் வேலையில்
ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர் !

இந்த சமயத்தில் சிலர் வெட்டியாக,
பொழுதை வீணடித்துக்கொண்டு,
சோம்பேறியாய் அலைகின்றனர் !

இந்த சமயத்தில் சிலர் தங்கள்
உடலை வளர்க்க சில உயிரினங்களைத்
தின்பதற்காக கொன்றுகொண்டிருக்கின்றனர் !

இந்த சமயத்தில் யாரோ சில புண்ணியவான்கள்,
வாயில்லா ஜீவராசிகளுக்கு ஆகாரத்தைக்
கொடுத்துக்கொண்டிருக்கின்றனர் !

இந்த சமயத்தில் யாரோ சிலர் போதையில்
மயங்கி,தன் நிலைமையை மறந்து,
வீதியில் விழுந்து கிடக்கின்றனர் !

இந்த சமயத்தில் யாரோ சிலர் தன் தவறை
உணர்ந்து,திருந்தி,கதறி அழுது, மன்னிப்பு கேட்டு,
ஒழுங்காக வாழ முயற்சிக்கின்றனர் !

இந்த சமயத்தில் சிலர் தன் காரியத்தைச்
சாதித்துக்கொள்ள, பொய்யாய் ஒரு அழுகையை
அழுது ஏமாற்றிக்கொண்டிருக்கின்றனர் !

இந்த சமயத்தில் சிலர் தன்னுடைய
சத்தியத்தை நிலைநாட்ட, கதறி அழுது,
புலம்பிக்கொண்டிருக்கின்றனர் !

இந்த சமயத்தில் சிலர் தேவையில்லாமல்
சிலருடன் சண்டை போட்டுக்கொண்டு,
கத்திக்கொண்டிருக்கிறார்கள் !

இந்த சமயத்தில் சிலர் அடுத்தவரின்
வளர்ச்சியில்,வெற்றியில்,
பொறாமை கொண்டு,வயிறெரிகிறார்கள் !

இந்த சமயத்தில் சிலர் உண்மையாக,
அடுத்தவரின் கஷ்டத்தில் பங்குகொண்டு,
அதற்கு தீர்வு தருகிறார்கள் !

இந்த சமயத்தில், சிலர் தன் பொருளை
இழந்துவிட்டு,அதைத் தேடிக்கொண்டு,
இங்கும் அங்கும் அலைகின்றார்கள் !

இந்த சமயத்தில், சிலர் அடுத்தவரை 
அழிக்க பெரிய திட்டம் தீட்டிக்கொண்டு,
ரஹஸ்யமாய் பயந்துகொண்டிருக்கின்றனர் !

இந்த சமயத்தில்,சிலர் தன் வெற்றியை,
மகிழ்ச்சியை,தனக்குப் ப்ரியமானவர்களிடம்
பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள் !

இந்த சமயத்தில், சிலர் தன் தோல்வியில்
துவண்டு போய்,வாழ்வை வெறுத்து,
தற்கொலைக்குத் தயாராகிறார்கள் !

இந்த சமயத்தில், சிலர் தன் தற்கொலை
முயற்சியை கைவிட்டு,வாழ்ந்தாகவேண்டும்
என்று வைராக்கியத்தோடு நடக்கின்றனர் !

இந்த சமயத்தில்,சிலர் தன் பணத்தை,
எங்கு முதலீடு செய்தால், லாபம் வரும்
என்று மனக்கணக்கு போடுகின்றனர் !

இந்த சமயத்தில், சிலர் தன் உடல்
பசிக்காக,பலரிடமும் கையேந்திப்
பிச்சைக் கேட்கின்றனர் !

இந்த சமயத்தில், சிலர் கஷ்டப்படுகின்றவருக்கு
தன்னால் இயன்ற உதவியைச்
செய்துகொண்டிருக்கின்றனர் !

இந்த சமயத்தில், சிலர் பெரிய
விபத்தில் மாட்டிக்கொண்டு,வெளியில்
வர முயற்சிக்கின்றனர் !

இந்த சமயத்தில், சிலர் காட்டில்
மிருகங்களை வேட்டையாடிக்
கொண்டிருக்கின்றனர் !

இந்த சமயத்தில் உலகத்தில்
பல கொலைகள்,கொள்ளைகள்,
நடந்துகொண்டிருக்கிறது !

இந்த சமயத்தில் காட்டில்
சிங்கங்ககள் மான் வேட்டையில்
ஈடுபட்டிருக்கின்றன !

இந்த சமயத்தில் பல ஜீவராசிகள்
காம சுகத்தில் தன்னையே மறந்து
மயங்கியிருக்கின்றன !

இந்த சமயத்தில் விதி வசப்பட்டு,
பலரும் எதையெதையோ
செய்து கொண்டிருக்கிறார்கள் !

இந்த சமயத்தில் பலர்
புத்தி ஸ்வாதீனமில்லாமல்
பைத்தியங்களாகத் திரிகின்றனர் !

இந்த சமயத்தில் பலருக்கும்
ஏதோ அறுவை சிகிச்சை
நடந்துகொண்டிருக்கிறது !

இந்த சமயத்தில் இளமையின்
வேகத்தில்,காம சுகத்திற்காக
பலரும் தவறான வழியில் செல்கின்றனர் !

இந்த சமயத்தில் தன்னுடைய
ப்ரியமானவர்களின் அந்திம க்ரியைகளைச்
சிலர் செய்துகொண்டிருக்கின்றனர் !

இந்த சமயத்தில் யாரோ அலுவலகத்தில்
தன்னுடைய மேலதிகாரியிடம்
திட்டு வாங்கிக்கொண்டிருக்கின்றனர் !

இந்த சமயத்தில் தான் பணக்காரனாவதற்கு
பல குறுக்குவழிகளை சிலர்
செய்யத் தயாராகின்றனர் !

இந்த சமயத்தில் எத்தனையோபேர்
தேர்விற்காக,பாடம் படித்துக்
கொண்டிருக்கிறார்கள் !

இந்த சமயத்தில் சிலர் அடுத்தவரை,
சந்தேகமாகப் பார்த்துக்கொண்டு
பயந்துகொண்டிருக்கிறார்கள் !

இந்த சமயத்தில் சிலர் தொலைக்காட்சி,
திரைப்படம்,நாடகம்,கேளிக்கை,சூதாட்டம்
ஆகியவற்றில் நேரத்தை வீணடிக்கின்றனர் !

இந்த சமயத்தில் பலர்
நாஸ்தீக வாதம் பேசி தங்களை
அறிவுஜீவிகளாக நினைக்கின்றனர் !

இந்த சமயத்தில் பலர்
அகம்பாவத்தில் பேயாட்டம்
ஆடிக்கொண்டிருக்கின்றனர் !

இந்த சமயத்தில் பலர்
அற்புதமாக பொய்யைச் சொல்லி
ஏமாற்றிக்கொண்டிருக்கின்றனர் !

இந்த சமயத்தில் பலர்
தன்னை நம்பினவர்களுக்கு
நம்பிக்கை துரோகம் செய்கின்றனர் ! 
 

இந்த சமயத்தில் இதுபோல்
கோடிக்கணக்கான நிகழ்ச்சிகள்
நடந்துகொண்டிருக்கிறது !

முழுவதும் சொல்லி முடியாது !
அனைத்தையும் ஒரே சமயத்தில்
பார்க்க தெய்வத்தால் மட்டுமே முடியும் !

நீ மனித ஜாதி ! 
அதனால் ஒரு எல்லைக்குமேல்
செல்ல முடியாது !

இன்னும் சில விஷயங்களும்
இந்த சமயத்தில்
நடக்கின்றது !

இந்த சமயத்தில் சிலர்
பகவானிடம் மனமுருகி
ப்ரார்த்தித்துக் கொண்டிருக்கிறார்கள் !

இந்த சமயத்தில் சிலர்
மிகசிரத்தையோடு பகவானின் திருநாமத்தை
ஜபித்துக்கொண்டிருக்கிறார்கள் !

இந்த சமயத்தில் சிலர்
பகவானுக்கு பக்தியுடன் புஷ்பங்களால்
அர்ச்சனை செய்து கொண்டிருக்கிறார்கள் !

இந்த சமயத்தில் சிலர்
பகவானுக்கு அழகாக நிவேதனம்
செய்கின்றார்கள் !

இந்த சமயத்தில் சிலர்
பகவானோடு ஆனந்தமாகப்
பேசிக்கொண்டிருக்கிறார்கள் !

இந்த சமயத்தில் சிலர்
பகவான் சொல்வதை காது கொடுத்துக்
கேட்டுக்கொண்டிருக்கிறார்கள் !

இந்த சமயத்தில் பலர்
தங்கள் க்ருஷ்ணனோடு
ராசக்ரீடை ஆடிக்கொண்டிருக்கிறார்கள் !

இந்த சமயத்தில் பலர்
வைராக்யத்தை அடைந்து,
ஞானத்தை அனுபவிக்கின்றனர் !

இந்த சமயத்தில் சிலர்
தங்கள் குருவின் உபதேசங்களை
கேட்டுக்கொண்டிருக்கிறார்கள் !

இந்த சமயத்தில் சிலர்
தங்களின் குருக்ருபையை
நினைத்து ஆனந்தக்கண்ணீரை விடுகின்றனர் !

இந்த சமயத்தில் சிலர்
தங்களின் குருவை த்யானம்
செய்துகொண்டிருக்கின்றனர் !

இந்த சமயத்தில் பலர்
ஆச்சரியமாக பகவத் பஜனை
செய்துகொண்டிருக்கிறார்கள் !

இந்த சமயத்தில் பலர்
புனிதமான நதிகளில் பல
பக்தர்களோடு நீராடுகின்றனர் !

இந்த சமயத்தில் பலர்
பகவானை குழந்தையாக
அனுபவிக்கின்றனர் !

இந்த சமயத்தில் பலர்
தங்கள் க்ருஷ்ணனுக்குத்
தங்களையே அர்ப்பிக்கின்றனர் !

இந்த சமயத்தில் பலர்
குருவோடு சத்விஷயங்களைப்
பேசிக்கொண்டிருக்கின்றனர் !

இந்த சமயத்தில் சிலர் இந்த
ஆனந்தவேதத்தில் திளைத்துக்
கொண்டிருக்கின்றார்கள் !

 இதில் ஆச்சரியமான
விஷயம் என்னவென்றால்,
இவை அனைத்தையும் பகவான் க்ருஷ்ணன்
ஒரே சமயத்தில்
கவனித்துக்கொண்டிருக்கின்றான் !

க்ருஷ்ணன் எத்தனை பெரியவன்
என்பது புரிந்ததா !
படித்து முடிக்கவே இத்தனை
சமயம் ஆயிற்று உனக்கு . . .
இனியாவது தற்பெருமை
பேசாதிரு . . . 

இதில் யாருக்கும் அடுத்தவர்
செய்யும் காரியமோ,மனமோ
உள்ளபடி தெரியவே தெரியாது !

யார் எந்தக் காரணம் கொண்டு,
எந்த பூர்வ வினையைக்கொண்டு,
எந்த அனுக்ரஹத்தைக் கொண்டு,
செய்கிறோம் என்பதை
அறிந்துகொள்வதில்லை !

ஆனால் அனைத்தும்
பகவான் க்ருஷ்ணனுக்குத்
தெரியும் !

அத்தனைக்குள்ளும்
அந்தர்யாமியாக இருந்து,
அவன் சாக்ஷியாக இருக்கின்றான் !

க்ருஷ்ணனுக்குத் தெரியாமல்
எதுவும் நடக்காது !

அதனால் உலக விஷயங்களில்
இப்படி நடக்கிறதேயென்று யோசித்து
நீ உன் வாழ்க்கையை இழக்காதே !

நீ உன் கடமையைச் செய் !
நீ உன் க்ருஷ்ணனைப் பிடித்துக்கொள் !
நீ உன் வாழ்க்கையை வாழ் !
 
 இந்தச் சமயத்தில் மாறிவிடு . . .
இந்தச் சமயத்தில் முழித்துக்கொள் . . .
இந்தச் சமயத்தில் வாழ்வை புரிந்துகொள் . . .

இனி வாழ்வில்
அந்தந்த சமயத்தில்
ஆனந்தவேதத்தின்
"இந்த சமயத்தை"
 நினைத்துக்கொள் . . .

அந்த சமயத்தில் சமாதானம் உண்டாகும் . . .

இந்த சமயத்தில்
ஒரு முறை 
"ராதேக்ருஷ்ணா"
என்று உரக்கச் சொல் !

இந்த சமயத்தில் ஆனந்தம் உன்னுடையது !
இந்த சமயத்தில் நிம்மதி உன்னுடையது !
இந்த சமயத்தில் க்ருஷ்ணன் உன்னுடையவன் !
இந்த சமயத்தில் பக்தியோடு இருக்கிறாய் !

 இந்த சமயம் நீடித்திருப்பதாக . . . 
 
 

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP