கோவிந்தவல்லியே !
கூடாரை வென்று
கூடுபவரை சேரும்
கூடுவதில் பிரியமான
கூடல் நாயகன் கோவிந்தனோடு
கூடித்திளைத்திட ஆசைப்பட்ட
குதூகலமான கோவிந்தவல்லியே !
கோவிந்தனைப் பாடி
கோவிந்தனிடம் பறை கொண்டு
கோவிந்தனை அனுபவிக்க
கூடல் நாயகன் கோவிந்தனிடம்
கொஞ்சலாய் சொன்ன
குஞ்சலமான சுந்தரவல்லியே !
யாம் பெறும் சம்மானம்
நீ தரும் அருளமுதம்
நாடு புகழும் பரிசென்று
கூடல் நாயகன் கோவிந்தனிடம்
உரிமையாய் சொன்ன
உன்னத ஞானவல்லியே !
சூடகமான சுரி வளையும்,
தோள் வளையும்,
தோடும், செவிப்பூவும்,
நீயே ஆகவேண்டும் என
கூடல் நாயகன் கோவிந்தனிடம்
அழகாய் சொன்ன
அற்புத ஆனந்தவல்லியே !
பாடகமான பாத கடகமும்,
பல ஆபரணமும் நீயே
பலவிதமாய் சூட்டுவாய் என
கூடல் நாயகன் கோவிந்தனிடம்
அர்த்தமாய் சொன்ன
அதிசய வேதவல்லியே !
ஆசையாய் ஆடை நீ தா,
பூசை செய்து அதை உடுத்தி,
திசை எட்டும் கொண்டாட,
உனைப் பாடுவோம் என,
உற்சாகமாய் சொன்ன
உன்மத்த கோமளவல்லியே !
பால் சோற்றில் நெய்
மேலாய் மூடியிருக்க,
கோலாகலமாய் கை வழிய,
கூடியிருந்து உன்னோடு
குளிருவோம் என,
கள்ளமாய் சொன்ன
கண்மணி கனகவல்லியே !
கூடாரவல்லியன்று
கோபாலனைக் கூடிட
குழந்தைகள் எமக்கு
கூடயிருந்து சொல்லித்தரும்
கூடல் நாயகன் கோவிந்தனின்
செல்லக் கோபாலவல்லியே !
உன் கையில் தந்தோம்,
உன் திருவடியில் விழுந்தோம்,
உன் வார்த்தையில் மாறினோம்,
உன்னால் வாழ்கிறோம்,
உன்னோடு வாழ்கிறோம்...
© *குருஜீ கோபாலவல்லிதாசர்*
0 கருத்துகள்:
கருத்துரையிடுக