திருப்பாவை பாடிய செல்வியே !
உண்ணும் சோறு, பருகும் நீர்,
உடுக்கும் ஆடையுமாய் ஆன
எம்பெருமானின் எம்பெருமான்
நந்தகோபாலனை
எழுப்பிய
எங்கள் செல்லக்குட்டியே,
திருப்பாவை பாடிய செல்வியே !
பெண்களின் கொழுந்து,
ஆயர் குல விளக்கு,
கண்ணனைக் கட்டிய
எம்பெருமாட்டி யசோதையை
எழுப்பிய,
எங்கள் செல்லக்குட்டியே,
திருப்பாவை பாடிய செல்வியே !
ஆகாசம் தாண்டி நீண்டு,
ஓங்கி உலகளந்த,
தேவாதி தேவனான,
யாவருக்கும் கோமானை,
எழுப்பிய,
எங்கள் செல்லக்குட்டியே,
திருப்பாவை பாடிய செல்வியே !
கண்ணனுக்கு முன்னே
வந்த பொன்னடியான்,
கைங்கர்ய செல்வனான
பலதேவனை
எழுப்பிய,
எங்கள் செல்லக்குட்டியே,
திருப்பாவை பாடிய செல்வியே !
இத்தனை பேரையும்
எழுப்பி, எமக்கு அருள,
இளங்காலை எழும்
வில்லிபுத்தூர் செல்லமே,
எங்கள் செல்லக்குட்டியே,
திருப்பாவை பாடிய செல்வியே !
எங்களுக்காய் நீ எழுவதால்,
நாங்கள் வீழோம்,
நாங்கள் தாழோம்,
உன்னையே தொழுவோம்,
எங்கள் செல்லக்குட்டியே,
திருப்பாவை பாடிய செல்வியே !
எங்களுக்காய் நீ வாழ்வதால்,
நாங்கள் எழுவோம்,
நாங்கள் வாழ்வோம்,
உன்னையே புகழ்வோம்,
எங்கள் செல்லக்குட்டியே,
திருப்பாவை பாடிய செல்வியே !
செல்வியே நீயே செல்வம்,
செல்வியே நீயே செல்லம்,
செல்வியே நீயே எல்லாம்,
செல்வியே உன் செவ்வடி
செவ்வித் திருக்காப்பு !
0 கருத்துகள்:
கருத்துரையிடுக