ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 13 செப்டம்பர், 2021

655. ஆசீர்வாதங்கள்

நான் அடைந்த அவமானங்களும்
எனக்கு ஆசீர்வாதங்களே !
ஏனெனில் அவமானங்களே
எனக்கு என்னைப் பற்றி 
புரியவைத்தன !

நான் பெற்ற தோல்விகளும்
எனக்கு ஆசீர்வாதங்களே !
ஏனெனில் தோல்விகளே 
என்னுடைய தவறுகளை எனக்கு
புரியவைத்தன !

நான் அனுபவித்த வியாதிகளும்
எனக்கு ஆசீர்வாதங்களே !
ஏனெனில் வியாதிகளே 
எனக்கு உடலின் மஹிமையை 
புரியவைத்தன !

நான் கேட்ட கடுஞ்சொற்களும் 
எனக்கு ஆசீர்வாதங்களே !
ஏனெனில் திட்டுகளே எனக்கு
ரோஷத்தைத் தந்து வாழ்வை
புரியவைத்தன !

நான் பெற்ற பல
நம்பிக்கை துரோகங்களும்
எனக்கு ஆசீர்வாதங்களே !
ஏனெனில் அவைதானே 
எனது முட்டாள்தனத்தை எனக்கு
புரியவைத்தன !

நான் எதிர்பார்க்காத
பயங்கர சூழ்நிலைகளும்
எனக்கு ஆசீர்வாதங்களே !
அவைதானே என்னை
எதையும் ஏற்கவும் கையாளவும் 
சொல்லித்தந்தன !

எனக்கு நடந்த
விபத்துக்களும்
எனக்கு ஆசீர்வாதங்களே !
அதனால் தானே மற்றவரிடம்
நன்றியுடன் இருக்க
கற்றுக்கொண்டேன் !

என்னை மற்றவர்கள் 
ஒதுக்கிவைத்ததும்
எனக்கு ஆசீர்வாதங்களே !
அதனால்தானே நான் 
கண்ணனிடம் ஒதுங்கினேன் !

மனிதர்களை நான் 
புரிந்துகொள்ளாததும்
எனக்கு ஆசீர்வாதமே !
அதனால்தானே நான்
குருவின் திருவடியில் 
ஒதுங்கினேன் !

இங்கே ஆசீர்வாதங்களைத் தவிர
வேறெதுவும் இல்லை !
எல்லாவற்றையும் 
ஆசீர்வாதங்களாக 
ஏற்றுக்கொண்டால்,
எங்கும் எப்போதும் நிம்மதி,
ஆனந்தம், சௌக்கியமே !

இது எனக்கு வாழ்க்கை 
கற்றுத்தந்த பாடம் !
புரிய வைத்தது எனது
குருவும், கண்ணனும்....

ஒவ்வொரு நல்லவையும் ஆசீர்வாதம் என்றால்,
இவைகளும் ஆசீர்வாதமே !
ஒரு விதத்தில் இவைகளும் நல்லவைகளே !
நமக்குப் பிடிக்கவில்லை என்றால் இவைகள் கெட்டவைகள் அல்லவே !

இவையெல்லாம் கண்ணன் விசேஷமாகத் தந்த மிகச்சிறந்த ஆசீர்வாதங்களே !

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP