ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 4 செப்டம்பர், 2026

பெரியது...

🙏🦚🦜🛕🇮🇳🕉️🪷

க்ருஷ்ணா !
நான் தேவகியோ வசுதேவரோ அல்ல !

க்ருஷ்ணா !
நான் யசோதையோ நந்தகோபனோ அல்ல !

க்ருஷ்ணா !
நான் கோபியோ, கோபனோ அல்ல !

க்ருஷ்ணா !
நான் மாடோ கன்றோ அல்ல !

க்ருஷ்ணா !
நான் கர்கரோ சாந்தீபனியோ அல்ல !

க்ருஷ்ணா !
நான் மயில்பீலியோ, புல்லாங்குழலோ அல்ல !

க்ருஷ்ணா !
நான் யமுனையோ, கோவர்த்தனமோ அல்ல !

க்ருஷ்ணா !
நான் அக்ருரரோ, விதுரரோ அல்ல !

க்ருஷ்ணா !
நான் சுதாமாவோ, அர்ஜுனனோ அல்ல !

க்ருஷ்ணா !
நான் நல்லவனா கெட்டவனா தெரியவில்லை !
நான் பாபியா புண்ணியனா தெரியவில்லை !
நான் முட்டாளா அறிவாளியா தெரியவில்லை !
நான் அசுரனா, பக்தனா தெரியவில்லை !

ஆனால் நீ பெரியவன் !
இந்த ஆவணி பெரியது !
இந்த அஷ்டமி பெரியது !
இந்த ரோகிணி பெரியது !
இந்த நாள் பெரியது !
இந்த இரவு பெரியது !

உன் கருணை பெரியது !
உன் உள்ளம் பெரியது !
உன் அன்பு பெரியது !
உன் எண்ணம் பெரியது !

என்னையும் உன்னிடம் வைத்துக்கொள்ளும் இந்த உரிமை பெரியது !

ஏதோ ஒரு ஜன்மாவில் இந்த ஜீவனும் உனக்காக மட்டுமே வாழும் வரம் தா...

எனக்காக, என் சுயநலத்திற்காக, ஆசைக்காக, காமத்திற்காக மட்டுமே வாழ்ந்தாலும் என்னையும் உன்னவனாக ஏற்கும் உன் திருவடிகளில் ஆத்ம சமர்ப்பணம்...

இன்று நான் உன்னை நினைக்க அன்று நீ பிறந்தனையோ...

இன்னும் இன்னும் பிறந்து வா....
என்னைப் போல் இங்கே கோடி கோடியாய் உண்டு...

உன் கருணையைத் தவிர போக்கிடம் அற்ற அல்ப ஜீவர்களின் உள்ளத்தை கொள்ளை கொள்ள வா...

ராதேக்ருஷ்ணா !

குருஜீ கோபாலவல்லிதாசன்
ஜன்மாஷ்டமி இரவு 11.40
4.9.26, வெள்ளி

🪷🕉️🇮🇳🛕🦜🦚🙏

Read more...

வியாழன், 27 ஆகஸ்ட், 2026

பரிமுகத்தோனே !

அற்புத ஞானத்தின் 
உருவான பரிமுகத்தோனே !

எல்லையில்லா ஆனந்தத்தின் சுரங்கமான பரிமுகத்தோனே !

படிகம் போல் வெண்ணிற
மேனியனே பரிமுகத்தோனே !

எல்லா வித்தைகளுக்கும்
ஆதாரமான பரிமுகத்தோனே !

வேதத்தை  மீட்டெடுக்கவே
அவதரித்த பரிமுகத்தோனே !

பிரமனுக்கு வேத ரகசியம்
அளித்த பரிமுகத்தோனே !

தேசிகருக்கு ஔடதகிரியில்
தரிசனம் தந்த பரிமுகத்தோனே !

வாதிராஜருக்கு கத்தரிக்காய்
தந்த பரிமுகத்தோனே !

இன்று நீ அவதரித்த நன்னாள்... 
நான் ஞானானந்தமாக நிர்மல இதயத்தோடு வாழ குதிரை வேகத்தில் அருள் செய்...
பரிமுகத்தோனே...

Read more...

புதன், 26 ஆகஸ்ட், 2026

ஸ்ரீ பத்மநாபா சரணம் !

ஸ்ரீ பத்மநாபா சரணம்!

துவாரகையில் திவாகர முனிக்குச் சிறுபிள்ளையாய் காட்சி தந்த 
என் செல்லமே...
ஸ்ரீ பத்மநாபா சரணம் !

அவரின் கோபம் பிடிக்காமல் அனந்தன் காட்டிற்குள் வந்து  ஒளிந்துகொண்ட என் சமத்தே...
ஸ்ரீ பத்மநாபா சரணம் !

உன்னைத் தேடி வந்த திவாகர முனிக்கு இலுப்பை மரத்தில் காட்சி தந்த என் ராஜாவே...
ஸ்ரீ பத்மநாபா சரணம் !

முனிக்காக 18 மைல் நீள 
உருவத்தை 18 அடியாகக் குறைத்த 
என் குஞ்சலமே...
ஸ்ரீ பத்மநாபா சரணம் !

வில்வமங்கள சாமியார் தந்த
கண்ணி மாங்காயை ஆசையாய் ஏற்றுக் கொண்ட என் தங்கமே... 
ஸ்ரீ பத்மநாபா சரணம் !

அனந்த புர நகரம் புக வினைகள் கெடும்  என்று சடகோபனுக்குச் சொன்ன  என் சாமியே...
ஸ்ரீ பத்மநாபா சரணம் !

அனிழம் திருநாள் ராஜாவின் திருப்படித்தானத்தை உகந்து 
ஏற்ற என் செல்வமே...
ஸ்ரீ பத்மநாபா சரணம் !

12008 சாளக்கிராம கடுசர்க்கரை யோக திவ்ய அனுக்ரஹ மூர்த்தியே, என் கண்ணே...
ஸ்ரீ பத்மநாபா சரணம் !

திருவோணத்தில் அவதரித்து, ஆதிசேஷனில் பள்ளிகொண்ட 
என் பிரிய ஆராவமுதே...
ஸ்ரீ பத்மநாபா சரணம் !

உனக்காகவே நான் !
எனக்காகவே நீ !
இதுவே வரம், தவம், சுகம் !
ஸ்ரீ பத்மநாபா சரணம் !

Read more...

வருக ! வருக !

🙏 வருக வருக! 
வாமன நம்பி!
வருக இங்கே!

🌼 வருக வருக! 
திருவோண நாதனே!
வருக இங்கே!

🌸 வருக வருக! 
கச்யபரின் தவமே!
வருக இங்கே!

🪷 வருக வருக! 
அதிதியின் வரமே!
வருக இங்கே!

🌼 வருக வருக! 
தேவரின் பாக்கியமே!
வருக இங்கே!

🌸 வருக வருக! 
நர்மதையின் நற்பலனே!
வருக இங்கே!

🌏 வருக வருக! 
பூமியை அளந்தவனே!
வருக இங்கே!

🙏 வருக வருக! 
திரிவிக்கிரம தெய்வமே!
வருக இங்கே!

🌊 வருக வருக! 
கங்கா நாயகனே!
வருக இங்கே!

🪷 வருக வருக! 
பலியின் காவலனே!
வருக இங்கே!

💐 வருக வருக!
உன்னையே எனக்கு
உள்ளபடி தருக!

🙏 வருக வருக!
என்னையே ஏற்று
அருள் செய்க!

Read more...

வியாழன், 25 ஜூன், 2026

கருடா...



கருடா !
ஆடி சுவாதியில்
அவதரித்தவனே !

கருடா !
கச்யபரின் தவத்தில்
தோன்றினவனே !

கருடா !
வினதையை விடுவிக்க
வந்தவனே !

கருடா !
அருணனின் தம்பியாய்
பிறந்தவனே !

கருடா !
அன்னைக்காக
அமிர்தத்தை
அபகரித்தவனே !

கருடா !
விஷ்ணுவின்
வரத்தால்
கொடியானவனே !

கருடா !
விஷ்ணுவுக்கும்
வரம் தந்து
வாகனமானவனே !

கருடா !
பகவானை எங்கும்
எப்போதும் சுமந்து
செல்பவனே !

கருடா !
நாராயணனின்
கட்டளைக்காக
சுமுகனை சுமப்பவனே !

கருடா !
கண்ணனின் மீது
வெய்யில் படாமல்
காப்பவனே !

கருடா !
வேதாந்த தேசிகருக்கு
காட்சி தந்து
உபதேசித்தவனே !

கருடா !
சந்த் துகாராமை
வைகுண்டத்திற்கு
அழைத்துச்
சென்றவனே !

கருடா !
என்னையும்
உன்னைப் போல்
பகவானுக்கும்
பக்தருக்கும்
அடிமையாய்
ஆக்கிவிடு !

கருடா !
உடலும் உள்ளமும்,
உயிரும் உணர்வும்,
பக்தியில் திளைத்திருக்க,
எனக்கு அருள் செய் !

நீ தான் விஷ்ணுவுக்கே வரம் தந்தவனாயிற்றே...
என்னையும் சுமுகனைப் போல் சுமந்து உன்னோடு எங்கும் திரியும் ஒரு வரம் தா...

Read more...

செவ்வாய், 3 மே, 2022

661. அக்ஷய திருதியை

🙏3️⃣🔥🛕📿👣🕉️🏔️🐚

 அக்ஷய திருதியை !

பரசுராமர் அவதார தினம் இன்று !
பரசுராமரைப்போலே தர்மத்திற்காக வாழும் வாழ்க்கை உனக்கு அமைய வாழ்த்துக்கள்....

வேதவியாசர் மஹாபாரதம் எழுதத்தொடங்கிய நாள் இன்று !
வேதவியாஸரைப் போன்று ப்ரும்மானந்தத்தில் நீ எப்போதும் திளைக்க வாழ்த்துக்கள் !

க்ருஷ்ணனுக்கு சுதாமா அவல் கொடுத்த தினம் இன்று !
சுதாமா போலே, நீ க்ருஷ்ணனுக்கு பிடித்தவை எல்லாம் தர வாழ்த்துக்கள் !

பகீரதன் தவத்தால் கங்கா தேவி பூமியை அடைந்த நாள் இன்று !
பகீரதன் போலே அசராத கலங்காத திடமான தவம் செய்ய உனக்கு வாழ்த்துக்கள் !

கண்ணனின் அண்ணன் பலராமன் அவதரித்த தினம் இன்று !
ஆதிசேஷன் போலே கண்ணனுக்கு சதா கைங்கரியம் செய்து கொண்டு நீ வாழ வாழ்த்துக்கள் !

பாண்டவர்கள் சூரியனிடமிருந்து அக்ஷய பாத்திரம் பெற்ற அற்புத நாள் இன்று !
பாண்டவர்கள் போலே க்ருஷ்ண சாந்நித்தியத்தோடு நீ வாழ வாழ்த்துக்கள் !

ஒரு ஏழைத்தாய் ஆதிசங்கரருக்கு நெல்லிக்காய் தந்த நாள் இன்று !
மஹாத்மாக்களுக்கு உன்னால் முடிந்ததை சமர்ப்பித்து, அவர்கள் ஆசியோடு நீ வாழ வாழ்த்துக்கள் !

அன்னபூரணி தேவி அவதரித்த அழகான நாள் இன்று !
உன் வம்சமே நிறைந்த  அன்னத்தோடு வாழ பரிபூரண ஆசிர்வாதங்கள் !

யமுனோத்திரி, கங்கோத்திரி கோயில்கள் திறக்கும் நாள் இன்று !
கங்கை யமுனை போல் பகவானின் சம்மந்தத்தோடு, உன் பரம்பரையே வாழ மனதார வாழ்த்துக்கள் !

வராஹ நரசிம்மர் உருவத்தை தரிசிக்கும் நாள் இன்று !
ப்ரஹ்லாதனைக் காத்த சிம்ஹாசலம் வராஹ நரசிம்மர் உன்னையும் உன் குடும்பத்தையும் காக்க ஆசீர்வாதங்கள் !

புரி ஜகந்நாதன் ரதம் செய்யும் பணி தொடங்கும் நாள் இன்று !
உன் மனமும் உடலும் ஜகந்நாதனும் அவன் பக்தர்களுக்கும் அனுபவிக்கும் ரதமாக மாற ஆசிகள் !

🙏3️⃣🔥🛕📿👣🕉️🏔️🐚

Read more...

சனி, 11 டிசம்பர், 2021

660. வாய்ப்பு

🙏🏼🇮🇳🛕🕉️👣📿🐚🪔🔥

🌱 *ஆனந்தவேதம்* 💐

_660. வாய்ப்பு !_

உலகில் ஜனனமும் மரணமும்
தினசரி நிகழ்வு !

நீயும் நானும் அப்படியே
பிறந்து வாழ்கிறோம் !

ஆனால் சிலரோ ஜனிப்பது,
நம்மை நெறிபடுத்தவே !

அந்தச் சிலரில், யாரோ ஒருவர் சாகாவரம் பெற்றவர் !

அந்த சாகாவரம் பெற்ற
ஒருவனே என் பாரதி !

எட்டயபுரம் தந்த 
தமிழ்ப்பித்தன் பாரதி !

காசி அனுபவித்த
ஞானக்கிறுக்கன் பாரதி !

பாண்டிச்சேரி அடைந்த
கவிதைச்சிற்பி பாரதி !

கடையம் பெற்ற
கடவுளின் துகள் பாரதி !

திருவல்லிக்கேணி கண்ட
சாரதிதாசன் பாரதி !

காலனை மிரட்டினவன் பாரதி !

கண்ணனை சேவகனாக்கியவன் பாரதி !

காளியை கேள்விகேட்டவன் பாரதி !

நெஞ்சுரம் கொண்டவன் பாரதி !

ரௌத்திரம் புரிந்தவன் பாரதி !

ஆங்கிலேயரின் சிம்மசொப்பனம் பாரதி !

மொழிகளையும், தேசத்தையும் 
ரசித்தவன் பாரதி !

வாழ்வே தவமாய் 
வாழ்ந்தவன் பாரதி !

அவனுக்கு இணை 
அவன் மட்டுமே !

பாரதியால் தமிழும்,
பாரதியால் பக்தியும்,
பாரதியால் தேசமும்,
புத்துணர்ச்சி பெற்றது !

பாரதி...
இந்தச் சொல்....
தமிழ் போதை தரும்...
தேச பக்தி தரும்...
உலகை ரசிக்க வைக்கும்...
கண்ணனை காதலிக்க வைக்கும்...

நல்லனவெல்லாம் தரும் ஒரு கற்பகவிருட்சம் என் பாரதி....

பாரதி...
உன் தோளோடு உரசி,
உன் சிரிப்பொலியில் சிலிர்த்து,
உன்னோடு தமிழ் குடித்து,
உன்னோடு இயற்கையை ரசித்து,
உன்னோடு கோபத்தீயில் ஜொலித்து,
உன்னோடு காடு மலை கடலெல்லாம் பார்த்து,
உன்னோடு உண்டு,
உன்னோடு தூங்கி,
உன்னோடு எழுந்து,
உன்னருகே ஒரு தோழனாக வாழ...
ஒரு வாய்ப்பு தா....

©குருஜீ கோபாலவல்லிதாஸன்
பாரதி பிறந்த நாள் !
11.12.21, சனிக்கிழமை

🙏🏼🔥🪔🐚📿👣🕉️🛕🇮🇳

Read more...

புதன், 3 நவம்பர், 2021

659. தீபாவளி

🛕👣💥✨🪔🐚🕉️🔥🌟📿

659. தீபாவளி 🔥

தந்தையின் வாக்கைக் காத்து,
ராமனும் 14வருஷம் கழித்து அயோத்தியா வந்த தெய்வீக தினம் தீபாவளி !

பரதனின் தவமும், பாதுகையின் தவமும், பலித்து, ராமதரிசனம் கிடைத்த நாள் தீபாவளி !

பரத்வாஜரின் ஆஸ்ரமத்தில், ஆஞ்சநேயனும், ராமனோடு ஓரிலையில் ஆகாரம் உண்ட நாள் தீபாவளி !

க்ருஷ்ணனும் துஷ்ட சங்கத்தால் தவறிழைத்த நரகாசுரனை வதம் செய்த நாள் தீபாவளி !

16100 கன்னிகைகளுக்கு, கோடி மன்மத அழகோடு கண்ணன் காட்சி கொடுத்த நாள் தீபாவளி !

16100 கன்னிகைகளும் கண்ணனை தங்கள் மணாளனாக வரித்த நாள் தீபாவளி !

பூதேவியும் கண்ணனை, தாமரைக்கண்ணா, தாமரைக்கையா, தாமரைப்பாதா, உந்திபூத்த உத்தமா என்று தோத்திரம் செய்த நாள் தீபாவளி !

 நரகனிடம் இழந்த தன் குடையை வருணனும்,  தன் குண்டலங்களை அதிதி தேவியும், மீண்டும் பெற்ற நாள் தீபாவளி !

சொர்க்கலோகத்து அதிபதி இந்திரனை வென்று, பாரிஜாத மரத்தை கண்ணன் துவாரகைக்கு கொணர்ந்த நாள் தீபாவளி !

லக்ஷ்மி தேவியும் நம்மைத் தேடி நம் வீட்டிற்கு வந்து, நம்மோடு இருந்து நம்க்கு அருளும் நாள் தீபாவளி !

கங்கையும் நம் வீட்டுத் தண்ணீரில் ஆவிர் பவித்து, நம்மை பவித்திரமாக்கும் நாள் தீபாவளி !

ராம நாமம் ஜபிப்போம் பரதனைப் போல்....

ராம கைங்கரியம் செய்வோம் ஹனுமனைப் போல்....

க்ருஷ்ணனிடம் சரணடைவோம் 16100 கன்னிகைகள் போல்....

இந்த தீபாவளி நமது அகம்பாவத்தை அழிக்கும் தீபாவளி...

இந்த தீபாவளி நமது தற்பெருமையை அழிக்கும் தீபாவளி...

இந்த தீபாவளி குரு மஹிமையை நமக்குப் புரியவைக்கும் தீபாவளி....

இந்த தீபாவளி புதிய வாழ்வைத் தரும் தீபாவளி....

தீபாவளி....
நம்மை நமக்கு புதியதாய் மாற்றித்தரும் தீபாவளி....

தீபாவளி வாழ்த்துகள்...

©குருஜீ கோபாலவல்லிதாஸன்
3.11.21, தீபாவளி...

📿🔥🌟🕉️🐚🪔✨💥👣

Read more...

ஞாயிறு, 17 அக்டோபர், 2021

658. இமயமே !

இமயமே....
உன் முன்னே என் அகம்பாவம் தவிடுபொடியாகிறது !

இமயமே....
உன் முன்னே நான் சிறு பிள்ளையாய் ஆகிறேன் !

இமயமே....
உனது அளவின் முன் நான் தூசியை விட சிறியதாகிறேன் !

இமயமே....
உனது அழகில் நான்
என்னையே இழக்கிறேன் !

இமயமே....
உனது எல்லையற்ற கருணையின் முன் நான் ஊமையாகிறேன் !

இமயமே....
உனது ஒவ்வொரு மேடு பள்ளமும் என்னைப் பக்குவப்படுத்துகிறது !

இமயமே....
உன்னுள் நான் என்னைத் தேடுகிறேன் !
உன்னுள் நான் தெய்வீகத்தை உணர்கிறேன் !

இமயமே....
நீ தரும் அமைதியும்,
உற்சாகமும், பலமும் உலகில் எவருமே தரமுடியாது !

இமயமே !
நீ வாழ்விற்கு புதிய பரிமாணத்தைத் தருகிறாய் !

இமயமே !
நீ வாழ்வின் மகத்துவத்தை போதித்துக்கொண்டிருக்கிறாய் !

இமயமே !
நீ உடலின் அருமையை ஒவ்வொரு விதத்தில் உணரவைக்கிறாய் !

இமயமே !
உன் உயரமும் அளவும் எல்லையில்லாதது !
ஆயினும் உன் அன்பும் அக்கறையும் அழவைக்கிறது !

இமயமே !
நீ தேவர்களையும், மனிதர்களையும், மிருகங்களையும், பறவைகளையும்,
பூச்சிகளையும்,
மரங்களையும்,
செடிகளையும், கொடிகளையும்,
நதிகளையும்,
கல்லையும்,
மண்ணையும்,
பனியையும்,
சமமாகவே வைத்திருக்கிறாய் !

இமயமே !
சாதுக்களின் புகலிடம் நீயே !

உன்னுள் எத்தனை ரகசியங்கள் !
நீ காட்டிக்கொண்டே இருக்கிறாய் !
நான் அனுபவித்துக் கொண்டே இருக்கிறேன் !

இமயமே !
உன்னிடம் வரும்போது நான் உயர்கிறேன் !
என் மனம் உயர்கிறது !
என் உடல் புதியதாகிறது !
என் குணங்கள் உயர்கிறது !
என் எண்ணங்கள் உயர்கிறது !
என் வாழ்வு அர்த்தமுள்ளதாகிறது !

இமயமே !
உனது தொடர்பு ஏற்பட்டபிறகே, நான் மனிதரின் குறைகளை மறந்து, குணங்களை ரசிக்க ஆரம்பித்திருக்கிறேன் !

இமயமே !
உன் மீது நடந்தபிறகே,
உயர்ந்ததையே நினைக்கும் மனமும்,
குறைகளை கவனிக்காமல் வாழவும்,
நிகழ்காலத்தில் இருக்கவும், கற்றுக்கொண்டேன் !

இமயமே !
உன்னை முழுவதும் அனுபவிக்க எனக்கு நீண்ட ஆயுளும்,
அருமையான ஆரோக்கியமும், குறைவில்லாத நேரமும் அருள்வாய் !

இந்த வாழ்வின் முடிவில்,
உன்னோடு உன்னுள் என்னை வைத்துக்கொள் !

நீ தந்தவை எதற்கும் நான் உனக்கு பதிலுக்கு ஒன்றுமே செய்யமுடியாது !

உன்னை கைகூப்பி
வணங்கித் தொழுகிறேன் !

என் க்ருஷ்ணன் கீதையில் "அசையாதவனவற்றுள் நான் இமயம்" என்று சொன்னதன் அர்த்தம் இப்போதுதான் சிறிது புரிகிறது !

நீ வேறல்ல, க்ருஷ்ணன் வேறல்ல என்பதே என் அனுபவம் !

க்ருஷ்ணனாகிய இமயமே !
இந்த ஜீவனை உன் மடிமீது எப்போதும் வைத்துக்கொள் !!!!

Read more...

வியாழன், 16 செப்டம்பர், 2021

657. கண்ணனுக்கு சமர்ப்பணம்

இந்த கண்கள் 👀 
கண்ணன் தந்தது !
🌏 உலகம் கண்ணன் படைத்தது !
அதனால் நான் காண்பவையெல்லாம் கண்ணனுக்கு சமர்ப்பணம் !

இந்தக் காதுகள்👂
கண்ணன் தந்தது !
ஒலிகளெல்லாம் அவனாலேயே !
அதனால் நான் கேட்பவையெல்லாம் கண்ணனுக்கு சமர்ப்பணம் !

இந்தக் கால்கள் 👣
கண்ணன் தந்தது !
நடப்பதெல்லாம் அவனாலேயே !
அதனால் நான் நடந்து
செல்லும் பாதையெல்லாம்
கண்ணனுக்கு சமர்ப்பணம் !

இந்தக் கைகள் 🙏🏼
கண்ணன் தந்தது !
செய்வதெல்லாம் அவனாலேயே !
அதனால் நான் செய்பவையெல்லாம்
கண்ணனுக்கு சமர்ப்பணம் !

இந்த மூக்கு 👃
கண்ணன் தந்தது !
வாசமெல்லாம் அவனே !
அதனால் நான்
நுகர்பவையெல்லாம்
கண்ணனுக்கு சமர்ப்பணம் !

இந்த 👄 வாய்
கண்ணன் தந்தது !
மொழியெல்லாம் அவனே !
அதனால் நான்
பேசுபவையெல்லாம்
கண்ணனுக்கு சமர்ப்பணம் !

இந்த 👅 நாக்கு
கண்ணன் தந்தது !
ருசியெல்லாம் அவனாலேயே !
அதனால் நான்
ருசிப்பதெல்லாம் 😋
கண்ணனுக்கு சமர்ப்பணம் !

இந்த ❤️ இதயம்
கண்ணன் தந்தது !
சிந்திக்க வைப்பவன் அவனே !
அதனால் நான்
சிந்திப்பதெல்லாம் 💭
கண்ணனுக்கு சமர்ப்பணம் !

இந்த உடல்👫🏽
கண்ணன் தந்தது !
உடலுக்கு அவனே ஆதாரம் !
அதனால் என் உடல் அனுபவிப்பதெல்லாம்
கண்ணனுக்கு சமர்ப்பணம் !

இந்த மூளை 🧠
கண்ணன் தந்தது !
அறிவைத் தூண்டுபவன் அவனே !
அதனால் என் அறிவில்
தோன்றுபவையெல்லாம்
கண்ணனுக்கு சமர்ப்பணம் !

இந்த வாழ்க்கை🫂
கண்ணன் தந்தது !
வாழவைப்பவன் அவனே !
அதனால் என் வாழ்க்கை
அப்படியே பூரணமாய்
கண்ணனுக்கு சமர்ப்பணம் !

Read more...

புதன், 15 செப்டம்பர், 2021

656. இது போதும் எனக்கு !

இன்றைய விடியலில்,
எனக்கும் வாழ்வுண்டு !

இன்று ☀️ சூரியன்,
எனக்காகவும் உதித்தது !

இந்தக் காற்று,
எனக்காகவும் வீசுகிறது !

சுழலும் 🌏 பூமிப்பந்தில்,
எனக்கும் இடமுண்டு !

இந்த ஆகாயம்,
எனக்கும் கூறையாகிறது !

இன்றைய உணவில்,
எனக்கும் பங்குண்டு !

தாகத்திற்கான தண்ணீரில்
என் பெயரும் உண்டு !

மானம் மறைக்கும் உடை,
என் உடலுக்கும் உண்டு !

இன்றைய வெய்யிலில்,
எனக்கும் வெப்பம் உண்டு !

இன்றைய குளிரில்,
எனக்கும் குளிர்ச்சி உண்டு !

இன்றைய மழையில்,
எனக்கும் சிறுதுளி உண்டு !

பரந்து விரிந்த கடலை,
நானும் ரசிக்க உரிமையுண்டு !

மரங்களின் நிழலில்,
நானும் ஒதுங்க இடமுண்டு !

சிரிக்கும் மலர்கள் 🌹
எனக்கும், வாசம் வீசும் !

பறவைகளின் 🐦 நாதம்,
என் செவிக்கும் உண்டு !

ஓடும் மேகங்கள்,
என் தலைமீதும் ஓடும் !

இன்றைய ஆசீர்வாதங்கள்,
என் மீதும் பொழிகிறது !

காணும் அழகெல்லாம்,
எனது கண்களுக்கும் உண்டு !

இன்றிரவு சந்திரன்,
எனக்கும் ஒளி வீசும் !

இன்றிரவு நக்ஷத்திரங்கள்,
எனக்காகவும் மின்னும் !

இன்றைய க்ருஷ்ண அனுபவத்தில்,
எனக்கும் அனுபவம் உண்டு !

இந்த நாள் மிகச்சிறந்த நாளே !
எல்லா நாளும் அற்புத
நாளே !

இறைவன் தந்த வரம் இந்த நாள் !
இந்த நேரம் !
இந்த நிமிடம் !
இந்த நொடி !
எல்லாமே தித்திக்கின்றது !

நான் ஆனந்தமாக
வாழ இது போதுமே !

யார் எப்படி நடத்தினாலும்,
யார் என்ன
நினைத்தாலும்,
யார் என்ன
சொன்னாலும்,
நான் வாழ்வதற்கு
அதிகாரம் உண்டு !
அருகதை உண்டு !
உரிமை உண்டு !

*இது போதும் எனக்கு !*

என் தெய்வம்
தந்த வாழ்க்கை...

என் குரு அருளோடு
நன்றாகவே வாழ்ந்தேன் !
நன்றாகவே வாழ்கிறேன் !
நன்றாகவே வாழ்வேன் !

©குருஜீ கோபாலவல்லிதாஸன்
15.9.21, புதன் கிழமை.
சம்பகலதா நவமி

🙏🏼🇮🇳🐚🛕📿👣🕉️🎯

Read more...

செவ்வாய், 14 செப்டம்பர், 2021

653. திருவாடிப்பூரம்

திருவாடிப்பூரம் !

வானகம் வாயார வாழ்த்திய நாள் இன்று !

 வையகம் பேறு பெற்ற நாள் இன்று !

பூமியும் பூரிப்படைந்த நாள் இன்று !

ஆடி ஆனந்தமாக ஆடிய நாள் இன்று !

பூரம் பூரணம் பெற்ற நாள் இன்று !

துளசியும் தாய்மை அடைந்த நாள் இன்று !

கருடனும் (பெரியாழ்வார்) தகப்பனான நாள் இன்று !

வில்லிபுத்தூர் விருந்தாவனம்🐄 ஆன நாள் இன்று !

கிளியும் கோவிந்தா என்று கூவின நாள் இன்று !

ஆதிசேஷனும் (ராமானுஜர்) அண்ணன் ஆன நாள் இன்று !

திருமுக்குளம் யமுனையாய் ஆன நாள் இன்று !

மார்கழியும் பிரேமையில் சிலிர்த்த நாள் இன்று !

சங்கும் தன் பெருமை உணர்ந்த நாள் இன்று !

மாலைகளும் தோள்களைத் தேடின நாள் இன்று !

நாழிக்கிணறும் கண்ணாடியான நாள் இன்று !

அரங்கனும் காதலில் அழகான நாள் இன்று !

ஏனென்றால்....
என் செல்ல மகள்....
ஆண்டாள் என்னைத் தகப்பனாக்க வந்த நாளன்றோ....இன்று....

என் தங்க மகளே....
இந்த அப்பனை என்றும் உன் அடிமையாகவே எப்போதும் வைத்துக்கொள்ளடி ராசாத்தி !

ஒன்றும் தர இந்த அப்பனுக்கு வக்கில்லை !
உன் பெயரை மட்டுமே பிதற்றும் பைத்தியமடி இவன்....

பல்லாண்டு பல்லாண்டு...
எப்போதும் சௌக்கியமாக நன்றாக இருப்பாயடி என் பட்டு மகளே...

உன் மீது பட்ட திருஷ்டி எல்லாம் எற்றைக்கும் என் மீது பாவமாய் சேரட்டும்....

நீ எப்போதும் ஜோராக இருப்பாயடி பட்டுக்குட்டி....


Read more...

திங்கள், 13 செப்டம்பர், 2021

655. ஆசீர்வாதங்கள்

நான் அடைந்த அவமானங்களும்
எனக்கு ஆசீர்வாதங்களே !
ஏனெனில் அவமானங்களே
எனக்கு என்னைப் பற்றி 
புரியவைத்தன !

நான் பெற்ற தோல்விகளும்
எனக்கு ஆசீர்வாதங்களே !
ஏனெனில் தோல்விகளே 
என்னுடைய தவறுகளை எனக்கு
புரியவைத்தன !

நான் அனுபவித்த வியாதிகளும்
எனக்கு ஆசீர்வாதங்களே !
ஏனெனில் வியாதிகளே 
எனக்கு உடலின் மஹிமையை 
புரியவைத்தன !

நான் கேட்ட கடுஞ்சொற்களும் 
எனக்கு ஆசீர்வாதங்களே !
ஏனெனில் திட்டுகளே எனக்கு
ரோஷத்தைத் தந்து வாழ்வை
புரியவைத்தன !

நான் பெற்ற பல
நம்பிக்கை துரோகங்களும்
எனக்கு ஆசீர்வாதங்களே !
ஏனெனில் அவைதானே 
எனது முட்டாள்தனத்தை எனக்கு
புரியவைத்தன !

நான் எதிர்பார்க்காத
பயங்கர சூழ்நிலைகளும்
எனக்கு ஆசீர்வாதங்களே !
அவைதானே என்னை
எதையும் ஏற்கவும் கையாளவும் 
சொல்லித்தந்தன !

எனக்கு நடந்த
விபத்துக்களும்
எனக்கு ஆசீர்வாதங்களே !
அதனால் தானே மற்றவரிடம்
நன்றியுடன் இருக்க
கற்றுக்கொண்டேன் !

என்னை மற்றவர்கள் 
ஒதுக்கிவைத்ததும்
எனக்கு ஆசீர்வாதங்களே !
அதனால்தானே நான் 
கண்ணனிடம் ஒதுங்கினேன் !

மனிதர்களை நான் 
புரிந்துகொள்ளாததும்
எனக்கு ஆசீர்வாதமே !
அதனால்தானே நான்
குருவின் திருவடியில் 
ஒதுங்கினேன் !

இங்கே ஆசீர்வாதங்களைத் தவிர
வேறெதுவும் இல்லை !
எல்லாவற்றையும் 
ஆசீர்வாதங்களாக 
ஏற்றுக்கொண்டால்,
எங்கும் எப்போதும் நிம்மதி,
ஆனந்தம், சௌக்கியமே !

இது எனக்கு வாழ்க்கை 
கற்றுத்தந்த பாடம் !
புரிய வைத்தது எனது
குருவும், கண்ணனும்....

ஒவ்வொரு நல்லவையும் ஆசீர்வாதம் என்றால்,
இவைகளும் ஆசீர்வாதமே !
ஒரு விதத்தில் இவைகளும் நல்லவைகளே !
நமக்குப் பிடிக்கவில்லை என்றால் இவைகள் கெட்டவைகள் அல்லவே !

இவையெல்லாம் கண்ணன் விசேஷமாகத் தந்த மிகச்சிறந்த ஆசீர்வாதங்களே !

Read more...

ஞாயிறு, 12 செப்டம்பர், 2021

654. பாரதி100

பாரதி....

காலம் கடந்து யோசித்து 
வருந்திப் புலம்பும் மூடர்
கூட்டத்தின் நடுவே,
காலத்தைக் கடந்து 
ஆக்கபூர்வமாக தெளிவாய் யோசித்த ஒருவன் நீ !

காசிக்கு சென்று காயும் பழமும் விட்டும், ஆசையை விடாத கூட்டத்தின் நடுவே,
காசியில் ஞானத்தையும் வைராக்கியத்தையும் அடைந்த ஒருவன் நீ !

வரட்டுப் பிடிவாதமாக தன் மொழியை உயர்த்திப் பேசும் கூட்டத்தின் நடுவே,
யாமறிந்த மொழிகளிலே தமிழ் இனிதானது என்று உரக்கப் பேசிய ஒருவன் நீ !

விடுதலை அடைய வாய்ப்பில்லை என்று கையாலாகாத்தனம் பேசிய கூட்டத்தின் நடுவே,
ஆடுவோமே பள்ளு பாடுவோமே,
ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று துள்ளலாய் பாடிய ஒருவன் நீ !

அடிமைப்பட்டுக் கிடந்து,
தைரியத்தை இழந்து,
வக்கற்று வாழ்ந்த 
கூட்டத்தின் நடுவே,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே என்று கர்ஜித்த ஒருவன் நீ !

சுதந்திரம் என்னும் கனவே காணாமால், சுயநலத்தில் ஓடிக்கொண்டிருந்த 
கூட்டத்தின் நடுவே,
என்று தணியும்
இந்த சுதந்திர தாகம் 
என்று தவித்த
ஒருவன் நீ !

விலங்குகளையும்,
பறவைகளையும்
அடிமைப்படுத்திய
கூட்டத்தின் நடுவே,
காக்கைக் குருவி
எங்கள் ஜாதி என்று
அன்பைப் பகிர்ந்த
ஒருவன் நீ !

இயற்கையை
இயற்கையாகக் கூட
பார்க்கத் தெரியாத
கூட்டத்தின் நடுவே,
காக்கைச் சிறகினிலும்,
பார்க்கும் மரங்களிலும்,
நந்தலாலாவை தரிசித்த
ஒருவன் நீ !

கடவுளை உள்ளபடி
உணராமல், அதிசயங்கள்
செய்யும் ஒருவனாக
மட்டுமே எதிர்பார்த்த 
கூட்டத்தின் நடுவே,
கண்ணனை சேவகனாய், நண்பனாய், காதலியாய்,
குருவாய் அனுபவித்த 
ஒருவன் நீ !

மானுடம் மறந்து,
அன்பை மறந்து,
தேசத்தை மறந்து,
பிரிந்து கிடந்த
கூட்டத்தின் நடுவே,
இனி ஒரு விதி செய்வோம், எல்லோரும் இந்நாட்டு மன்னர்
என்று சமத்துவம் பேசிய
ஒருவன் நீ !

பார்ப்பவரிடம் எல்லாம்
தன் கஷ்டங்களைச் 
சொல்லி புலம்பி,
தன்னை நியாயப்படுத்தும்
கூட்டத்தின் நடுவே,
சொல்லடி சிவசக்தி,
எனைச் சுடர்மிகும்
அறிவுடன் படைத்துவிட்டாய் என்று
பராசக்தியிடம் வாதம் செய்த
ஒருவன் நீ !

இறைவன் என்னை
சோதிக்கிறான் என்று
சோகக் கண்ணீர் வடிக்கும்
கூட்டத்தின் நடுவே,
எத்தனை கோடி இன்பம் 
வைத்தாய் எங்கள் இறைவா
என்று உலகிற்கு
பறைசாற்றின
ஒருவன் நீ !

புதிய ஆத்திசூடி பாடி
புரட்சி செய்த
ஒருவன் நீ !
புதுமைப் பெண்ணாய்
வாழச் சொன்ன
ஒருவன் நீ !
ஜாதிகள் இல்லையடி
என்று முழங்கிய
ஒருவன் நீ !
ஆங்கிலேயனின்
தூக்கத்தைக் கெடுத்த
சிம்மசொப்பனமாகிய
ஒருவன் நீ !
காணி நிலம் வேண்டும்
என்று உரிமையாய் கேட்ட
ஒருவன் நீ !
ஓடி விளையாடு பாப்பா என்று குழந்தைக்கும் பாடிய
ஒருவன் நீ !
மனதில் உறுதி வேண்டும் என்று திடமாய் கேட்ட
ஒருவன் நீ !
பகைவனுக்கு அருள்வாய் நன்னெஞ்சே என்று தன் நெஞ்சுக்கு சொன்ன
ஒருவன் நீ !

மரணத்தைக் கண்டு,
மரணத்தை நினைத்து,
மரணத்திற்கு அஞ்சிக்
கதறும் பயந்தாங்கொல்லி
கூட்டத்தின் நடுவே,
காலா ! என்றன் காலருகே வாடா !
சற்றே உனை மிதிக்கிறேன் ! என்ற
இறவா வரம் பெற்ற
ஒருவன் நீ !

எத்தனை சொல்லினும்,
உன் பெருமை பேசமுடியாதடா பாரதி...
ஆனால் பேசப்பேச
இனிக்குதடா உன் நினைவுகள் !

எனக்கு மீசை மேல்
ஆசை வந்தது உன்னால் !
எனக்கு தமிழ்க்காதல்
பித்துப்பிடித்தது
உன்னால் !
எனக்கு தேசபக்தி
முக்கியமானது
உன்னால் !
எனக்கு காணி நிலம்
லட்சியமானது
உன்னால் !
எனக்கு இமயமலை
புகலிடமானது
உன்னால் !
எனக்குக் கடலும்,
அலையும் இனித்தது
உன்னால் !
எனக்குத் தேவையான
தைரியம் வந்தது 
உன்னால் !

100ஆண்டுகள் என்ன,
1000 ஆண்டுகள் என்ன,
கோடி ஆண்டுகள் நீ
வாழ்வாய்...
வாழவைப்பாய்...

உன் கனவுகள் எல்லாம் நிறைவேற்றுவாள் உன் பராசக்தி !
உன் ஆசைகள் எல்லாம்
நடத்தித்தருவான் உன் சேவகன் கண்ணன் !

அதையெல்லாம்
பார்த்துவிட்டு,
வைகுந்தத்தில்
உன்னிடம் வந்து
சொல்வேன்...
உன்னை மீண்டும்
இங்கே கூட்டிவருவேன் !

உன் வாயால்,
அகண்ட பாரதத்தை,
உன்னத தேசத்தை,
பல கோடி பாடல் பாட...
உன்னருகே நானிருந்து,
கேட்பேன், எழுதுவேன்,
ஆடுவேன், பாடுவேன்,
அழுவேன், தொழுவேன்,
உன் காலடியில் விழுவேன் !

உன் தமிழ் மீது ஆணை !
நடக்கும்... நடக்கும்...நடக்கும்...

Read more...

புதன், 23 ஜூன், 2021

652. ஸ்ரீமந் நாதமுனிகள்

🇮🇳🕉️📿🐚🛕🦅🙏🏼🏹
ஆனி மாதம் பெற்ற 
ஸ்ரீவைஷ்ணவ சிகாமணியே....

அனுஷம் பெற்ற
ஸ்ரீவைஷ்ணவ பாக்கியமே....

காட்டுமன்னார்கோயில் பெற்ற
ஸ்ரீவைஷ்ணவ ரத்தினமே !

பிரபந்தம் தேடி அலைந்த
ஸ்ரீவைஷ்ணவ ஹம்சமே !

கண்ணி நுண் சிறுத்தாம்பு ஜபித்த ஸ்ரீவைஷ்ணவ தாஸரே !

நம்மாழ்வாரைத் தரிசித்த
ஸ்ரீவைஷ்ணவ சிரோமணியே !

நாலாயிரம் தொகுத்த
ஸ்ரீவைஷ்ணவ பொக்கிஷமே !

தேவகானம் அறிந்த
ஸ்ரீவைஷ்ணவ குயிலே !

ராமனையும், கண்ணனையும் தேடி
நெடுந்தூரம் போன எங்கள் ஸ்ரீவைஷ்ணவ சிகரமே ! நாதமுனிகளே...

வீரநாராயணபுரத்து ஸ்ரீவைஷ்ணவ அடையாளமே !

அடியேனுக்கும் ஸ்ரீவைஷ்ணவ தாசர்களின் திருவடியில் பாதுகையாய் வாழ அருள் செய்வீர் !

இன்று உமது திருநக்ஷத்திரம் !
இந்த நாயேனையும் திருத்தி நாலாயிர திவ்யப்பிரபந்த பைத்தியமாக்கி அருள்வீர் !

🙏🏼🦅🛕🐚📿🏹🕉️🇮🇳

Read more...

திங்கள், 21 ஜூன், 2021

651. பெரியாழ்வார்

பெருமாளுக்குப் பரிவோடு
பல்லாண்டு பாடிய 
பெரியாழ்வாரே...
உமக்கு பல்லாண்டு பல்லாண்டு !

வடபத்ரசாயிக்கு
பூமாலை கட்டிய
கலியுக மாலாகாரரே...
உமக்கு பல்லாண்டு பல்லாண்டு !

பாண்டியன் சபையில்
நாராயணனை நிரூபித்த
வேதப்பிரானே
உமக்கு பல்லாண்டு பல்லாண்டு...

ஸ்ரீவில்லிபுத்தூரில்
கண்ணனை வளர்த்த 
ஆண் யசோதாவே...
உமக்கு பல்லாண்டு பல்லாண்டு....

பூமிப்பிராட்டியான ஆண்டாளையும்
கோபியாக மாற்றின
பட்டர்பிரானே...
உமக்கு பல்லாண்டு பல்லாண்டு...

அரங்கனுக்கு கோதையைக்
கல்யாணம் செய்துகொடுத்த,
எங்கள் ஜனகரே...
உமக்கு பல்லாண்டு
பல்லாண்டு...

ஆனி சுவாதியில் அவதரித்த
கைங்கர்ய ப்ரிய கருடாழ்வாரே...
உமக்கு பல்லாண்டு பல்லாண்டு...

எம்மையும் தொண்டர்குலத்தில்
சேர்ப்பித்த எங்கள் சத்குருவே
உமக்கு பல்லாண்டு
பல்லாண்டு...

Read more...

ஞாயிறு, 30 மே, 2021

648. திருக்கச்சிநம்பிகள்

🙏🕉️🛕🐚📿👣❤️🪔🇮🇳

*ஆனந்தவேதம் !*

_648. திருக்கச்சி நம்பிகள் !_

கண்ணனுக்காக
பூந்தோட்டம் 
வைத்தான்
மாலாகாரர் சுதாமா !

அரங்கனுக்காக
பூந்தோட்டம்
அமைத்தார்
தொண்டரடிப்பொடியாழ்வார் !

வரதனுக்காக
*பூந்தோட்டம்*
சமைத்தார்
திருக்கச்சிநம்பிகள்...

🕉️🛕🐚📿👣🪔❤️

அரங்கனிடம்
பேசினான்
ராமன் !

ஆராவமுதனிடம்
பேசினார்
திருமழிசையாழ்வார் !

வரதனிடம்
*பேசினார்*
திருக்கச்சிநம்பிகள்...

🕉️🛕🐚📿👣🪔❤️

ராமனுக்கு
சாமரம்
வீசினான்
சத்துருக்கனன் 
அயோத்தியில் !

பலராமனுக்கு
விசிறி வீசினான்
கண்ணன்
விருந்தாவனத்தில் !

வரதனுக்கு
*விசிறி வீசினார்*
திருக்கச்சிநம்பிகள்
காஞ்சியில்...

🕉️🛕🐚📿👣🪔❤️

வசிஷ்டருக்கு
சிஷ்யன் ஆனான்
ராமன் !

சாந்தீபனிமுனிக்கு
சிஷ்யன் ஆனான்
க்ருஷ்ணன் !

திருக்கச்சி நம்பிக்கு
*சிஷ்யன் ஆனான்*
வரதன்...

🕉️🛕🐚📿👣🪔❤️

ரிஷிகள் வீட்டில்
உணவருந்தினான்
ராமன் !

விதுரன் வீட்டில்
கூழ் குடித்தான்
கண்ணன் !

ராமானுஜர் வீட்டில்
*ஆகாரம் உண்டார்*
திருக்கச்சி நம்பிகள்...

🕉️🛕🐚📿👣🪔❤️

பிராட்டியிடம்
தூதுசென்றார்
ஆஞ்சநேயர்
ஸ்ரீராமானுக்காக !

திருதராஷ்டிரனிடம்
தூது சென்றான்
கண்ணன்
பாண்டவருக்காக !

வரதராஜனிடம்
*தூது சென்றார்*
திருக்கச்சிநம்பிகள்
ராமானுஜருக்காக....

🕉️🛕🐚📿👣🪔❤️

நாராயணன்
சொன்னதை
தேவருக்குச்
சொன்னார்
பிரம்மா !

கண்ணன்
சொன்னதை
கோபியருக்கு
சொன்னான்
உத்தவன் !

வரதன்
சொன்னதை
*ராமானுஜருக்கு*
சொன்னார்
திருக்கச்சி நம்பிகள்...

🕉️🛕🐚📿👣🪔❤️

ஞானத்திற்காக
மாடு மேய்த்தான்
சத்யகாம ஜாபாலன் !

ஆசைக்காக
மாடு மேய்த்தான்
ஆயர்குலக் கண்ணன் !

ஆசார்யனுக்காக
மாடு மேய்த்தார்
*திருக்கச்சி நம்பிகள்...*

🕉️🛕🐚📿👣🪔❤️

திருக்கச்சி நம்பிகளே...
உம்மைப்போலே,
வரதனோடு பேச,
ராமானுஜரோடு வாழ,
அகம்பாவம் இல்லாமல் இருக்க,
அடியேனுக்கு அருள் செய்வீர்....

© அடியேன்
கோபாலவல்லிதாசன்
21.2.21, ஞாயிறு

🪔❤️👣📿🐚🛕🕉️🇮🇳

Read more...

650. ப்ரியதர்ஷினி

🇮🇳📿🐘🐚🏹🛕🕉️🙏🏼

🌱✒️ *ஆனந்தவேதம்*💧🔥

*650. ப்ரியதர்ஷினி !*

போய் வா பிரியதர்ஷினியே !!!!

உன்னுடைய பிரிய தர்சனம் இனி இந்தப் பூமியில் எனக்கில்லை !

பேரிகை சுமந்து நீ
என் பத்மநாபன் முன்
ஆடி ஆடி வரும்போது 
நான் உள்ளே குதூகலித்தது நீ அறிவாயே...

உன் முதுகில் அமர்ந்து பத்மநாபனுக்கு பேரிகை
வாசிக்க நான்
ஆசைப்பட்டது நீ அறிவாயே...

வேட்டை ஆராட்டு சமயத்தில், நீ வெளிவரும் அழகைப் பார்த்தபோது நான்
குழந்தையாய் ஆனது நீ அறிவாயே...

உன்னை நான் சேவித்தபோதெல்லாம் 
என்னை நீ அழகாய்
ஆசீர்வதிப்பாயே...

உன் முகத்தில் 
முத்துச்சட்டையாய்,
ஒரு ஜன்மாவில் நீ என்னை வைத்துக்கொள்வாய்...

உன்னை எல்லோரும் பார்த்தனர். உன்னை பத்மநாபன் ரசித்ததை
நான் பார்த்தேன்...

நீ பத்மநாபனுக்கு 
ப்ரியதர்ஷினி...
நீ குழந்தைகளுக்கு
ப்ரியதர்ஷினி...
நீ தேவர்களுக்கு
ப்ரியதர்ஷினி...

நான் கஜேந்திரன் கதை படித்திருக்கிறேன் ; கேட்டிருக்கிறேன் ; சொல்லியிருக்கிறேன்.

ஆனால் நான் பார்த்த பக்தப்ரிய கஜராணி
நீ மட்டுமே....

எத்தனை உற்சவத்தில் பத்மநாபனின் பேரிகை
சுமந்திருப்பாய்....

எத்தனை வேட்டை,
எத்தனை ஆராட்டு,
எத்தனை லக்ஷதீபம்
பார்த்திருப்பாய்...

நீயல்லவோ பத்மநாபனின் சொத்து...
நீ பத்மநாபன் கோயிலில் பிரசாதம் சாப்பிடும் அழகை அனந்தபத்மநாபன் எப்படியெல்லாம் ரசித்தான் !!!

பத்மநாபன் கோயிலில்,
நான் வலம் வரும்போதெல்லாம்,
தென்மேற்கு திசையில்,
உன்னைத் தானே நினைப்பேன்...

திசையில்லா வைகுண்டத்திலும்,
தென்மேற்கு திசையில்,
அனந்தபத்மநாபனின்
உற்சவத்திற்காக இனி நிற்பாயோ ?!?

அங்கும் பேரிகையை
சுமப்பாயா ?!
அங்கும் உன்னைப் பார்த்து, வைகுண்டவாசிகள் "ஹொய் ஹொய்...ஹொய் ஹொய் ஹொய்..." என்று குழந்தைகளாய் குதிப்பரோ...

இனி வைகுண்டம் பாக்கியம் பெற்றது...

ஒரு நாள் நானும் வருவேன் வைகுண்டம்...
அங்கே வந்து உன்னை
மீண்டும் இங்கே,
திருவனந்தபுரம்
அழைத்துவருவேன்...

அதுவரை...
இந்த பத்மநாபதாசனை மறவாதே...
நான் என்ன பத்மநாபதாசன்...
நீ தான் பத்மநாபதாசி...

எதோ ஒரு கண்ணனின் கோபிதான் நீ...
இல்லையென்றால் இத்தனை வருடம் அனந்தபத்மநாபன் தன்னருகே யாரை இப்படி வைத்திருந்தான்...?!

ஹே கஜராணி...
ஹே பத்மநாப ப்ரியே...

போய் வா...
சீக்கிரம் வா...

நீயில்லாமல்
நம் பத்மநாபன் இளைத்துவிடுவான்...

அதனால் உடனேயே
நம் திருவனந்தபுரத்திற்கு,
உன் பத்மநாபனுக்காக
வந்துவிடு...

உனக்காக
பத்மநாபனோடு
தென்மேற்கு மூலையில்
நான் காத்திருக்கிறேன்...

©குருஜீ கோபாலவல்லிதாசன்...
30.5.21, ஞாயிறு

🙏🏼🕉️🛕🏹🐚📿🇮🇳🐘

Read more...

புதன், 26 மே, 2021

649. சந்திரசேகரா...

சந்திரசேகரா...
வைகாசி பெற்ற விந்தை நீ...

சந்திரசேகரா...
அனுஷம் பெற்ற அற்புதம் நீ...

சந்திரசேகரா...
காஞ்சி பெற்ற கருணை நீ...

சந்திரசேகரா...
அத்வைதம் பெற்ற அருந்தவம் நீ...

சந்திரசேகரா...
சன்னியாசம் பெற்ற சன்மானம் நீ...

சந்திரசேகரா...
மானுடம் பெற்ற மகான் நீ...

சந்திரசேகரா...
கலியுகம் பெற்ற பாக்கியம் நீ...

சந்திரசேகரா...
வேதம் பெற்ற வித்தை நீ...

சந்திரசேகரா...
சரஸ்வதி பெற்ற சத்பாத்திரம் நீ...

சந்திரசேகரா...
நாத்திகம் பெற்ற சிம்மசொப்பனம் நீ...

சந்திரசேகரா...
தமிழ் பெற்ற தனம் நீ...

சந்திரசேகரா...
நான் பெற்ற பாக்கியம் நீ...

சந்திரசேகரா...
நீர் மஹாபெரியவா தான்...
ஆனாலும் என்றும் என் செல்லம்தான்...

Read more...

ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2020

647. ஆளவந்தார்...

📿🕉️🙏🏻👣🙌👏🏻🇮🇳

*ஆனந்தவேதம் !*

_647. எம்மை ஆளவந்தீரோ !!!_

ஆடி உத்திராடத்தில்
காட்டுமன்னார்கோயிலில்
எம்மை ஆளவந்தீரோ...

ஆக்கியாழ்வானுடன்
வாதிட்டு அரசியையும்
அரசையும் ஆளவந்தீரோ !!!

தூதுளைக் கீரையால்,
மணக்கால் நம்பியின் கீதையால்
ஆளவந்தீரோ !!!

முடிசூடும் அரசை விட்டு
அரங்கனின் அடி சூடும் அரசை
ஆளவந்தீரோ !!!

ஸ்ரீமந் நாதமுனிகளின்
திவ்யப்ரபந்த அனுபவத்தை
ஆளவந்தீரோ !!!

யோக ரஹஸ்யத்தை விட்டு
என் அனந்தபத்மநாபனை
ஆளவந்தீரோ !!!

கரமணையாற்றங்கரையில்,
தெய்வவாரியாண்டானை
ஆளவந்தீரோ !!!

இளையாழ்வார் வைபவம் கேட்டு
காஞ்சியில் திருக்கச்சிநம்பியை
ஆளவந்தீரோ !!!

இளையாழ்வாரைக் கண்டு
ஆம் முதல்வன் இவன் என
ஆளவந்தீரோ !!!

வரதனிடம் இளையாழ்வாரை
ஸ்ரீவைஷ்ணவம் தழைக்கக் கேட்டு
ஆளவந்தீரோ !!!

மாறனேரி நம்பியை சிஷ்யராக்கி,
உன்னத தியாகியாக்கி
ஆளவந்தீரோ !!!

இளையாழ்வாரை தரிசனத்திற்கு
இழைய பெரியநம்பியை நியமித்து
ஆளவந்தீரோ !!!

ரகஸ்யங்களை சிஷ்யர்களுக்கு
சொல்லி அதை இளையாழ்வாரிடம்
சேர்பித்து அனுக்ரஹித்து
ஆளவந்தீரோ !!!

சரமத் திருமேனியிலும்,
இளையாழ்வாருக்கு தன் விரல்
மடங்கிய மகிமையைக் காட்டி
ஆளவந்தீரோ !!!

ஸ்ரீவைணவ தரிசனத்தை,
உலகிற்குப் புரியவைத்து,
மத்தியமமாய் ஆளவந்தீரோ !!!

ஆம் !!! ஆளவந்தீர்...ஆதலால்
நீரே எம் ஆளவந்தார் ....

ஆள வந்தீர்....
ஆளவே வந்தீர்....
ஆளவந்தாரே....

என்றும் ஸ்ரீவைணவத்தை
ஆளும் ஆளவந்தாரே,
உமக்குப் பல்லாண்டு பல்லாண்டு...

அடியேன் ஸ்ரீவைஷ்ணவதாஸன்
கோபாலவல்லியையும்
ஆளவந்தீரே...

©குருஜீ கோபாலவல்லிதாசர்
2.8.2020, ஞாயிறு....

🇮🇳📿🕉️🙏🏻👣👏🏻🙌

Read more...

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP